Tuesday, January 29, 2008

ஒரு வழி யாத்திரை...


நீண்டதொரு தவத்திற்கு பின்னாக
தெய்வம் நானென்றறிந்தயிரவில்
உடல் விட்டு வெளியேறியது நான்...

நானின் உடல் அயர்ந்துறங்க
எதிர் வீட்டு அழகியின்
அறை சென்றது,
அழகி தோட்டக்காரனோடு
முயங்கியிருந்தாள் கனவில்
நானுக்கு யாரின் கனவுள்ளும் உட்புகும் சாத்தியமிருப்பதறியாமல்....

நான்
ஓர் ரோஜாவுக்குள் சென்றது
அதிகாலையில் தோட்டக்காரி
ரோஜாவை கொய்து
காம்பினின்று குருதி சொட்டவும்
பதறி ஓடினாள்...

செடியினின்று
ஓர் பத்திரிக்கையாளனின்
எழுதுகோலுக்குள் சென்றது
பிற்பகலில் அவன்
கொலை செய்யப்பட்டான்...

நானானது
நானுக்கு விருப்பமான
நடிகையின் யோனிக்குள் சென்றது,
காப்பர்-டி-க்கும் ஆண்குறிகளுக்கும்
நடுவில் நசுங்கி
சிறுநீர் கழிக்க அவள் ஒதுங்கிய
சிறுநொடிப் பொழுதில்
காயங்களோடு வெளியேறி கடற்கரை சென்றது....

அலைநுரை துய்த்த நானானது
கடல் மட்டம் மீதாக
வட்டமிடும் வல்லூறுள் சென்றது...

நீரின் மேல் துள்ளும்
மீனின் மீதிருந்தது
வல்லூறின் கவனம்,
வல்லூறை விடுத்து
மீனுக்குள் தாவியது நான்..

வல்லூறின் சிறகுகள்
பழுதடைய பிரார்த்தித்தது மீன்...
நானுக்கு சலித்தது
உடல் திரும்ப எண்ணி
அறை வந்தது....

நானின் உடலை
தகனித்த சாம்பல்
பானையில் இருந்தது........