Friday, February 26, 2010

Baraka - ஓர் அற்புத ஆவணம்.



Ron Fricke இயக்கிய இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்த பொழுது வாழ்வு ஒரு சுத்தமான பரிசு என்ற ஓஷோவின் சொற்கள் தான் நினைவிற்கு வந்தது.ஒரு துறவியென தியானம் கொண்டிருக்கும் இமயமலை சாரலும் அவ்வெளியில் மிதக்கும் பறவையும், அகவெளியினை மயில் தூவியென வருடும் Michel stearns ன் உன்னதமான பிண்ணனி இசையுமாக விரியும் இப்படம் ஒரு அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம்.இப்படத்தை பெரிய திரையில் பார்த்தவர்கள் பாக்கியவான்கள்.

Baraka என்ற சூஃபி சொல்லுக்கு ஆசிர்வாதம் என பொருள் கொள்ளலாம்.விளக்கங்களோ,காட்சிபடுத்தப்பட்ட பிரதேசங்கள் குறித்த குறிப்புகளோ கூட இல்லாமல் நாடோடி போல் அலைந்து திரியும் இப்படத்தின் திரைக்கண்கள் ஓரங்குலமும் நகராமல் ஓர் உன்னத ஆன்மீக யாத்திரையை உள்ளே நிகழ்த்திவிட்டதான அனுபவத்தையே தருகிறது.மாபெரும் படைப்புகள் மௌனங்களால் செய்யப்பட்டவையாகவே இருக்க வேண்டும்.அவை நமக்கு தரும் மேலான பரிசுகளும் இந்த மௌனத்தையே.

பனிப்புகை சூழ விரியும் ஜப்பானிய பனிமலை பிரதேச ஏரியொன்றில் அமிழ்ந்தபடி தியானிக்கும் குரங்கும்,அந்தகார நட்சந்திரங்களுமாக திரையில் விரியத்தொடங்குகிறது கனவு வெளி.மெல்ல நேபாளத்தின் காட்மண்டுவில் உள்ள தர்பார் ஸ்கொயரின் புராதண நகருக்குள் நுழைந்து பழைய கோயில்கள் ஸ்தூபிகள் என காட்சி படுத்தி நகர்கிறது.நேபாளம் பெரும்பாண்மை ஹிந்து மத நெறியாள்கைக்கு உட்பட்டது என செய்தியாகவே அறிந்திருக்கிறோம்.படத்தில் பார்க்கும் பொழுது குறைந்தது அருகில் இருக்கும் இந்த நாட்டிற்காவது சென்று வந்திருக்கலாமே என்றே எண்ண தோன்றியது.காட்சிபடுத்தப்பட்டிருக்கும் கோயில்களும் அந்நகரின் எளிய மக்களும் மிகவும் வசீகரிக்கின்றனர்.எவ்வித தொடர்புமின்றி சட்டென திபெத்திய புத்த விகாரைக்குள் நுழைந்து பிக்குகளும் அவர்களது சடங்குகளுமான நிலவெளிக்கு அழைத்து செல்கிறது கேமரா.

புனித நூலை வாசிக்கும் ஒரு ஹிந்து சாதுவின் சமஸ்கிருத எழுத்துக்கள் ஹீப்ரு மொழியாகி இஸ்ரேலின் பாதிரி கைகளுக்குள் அமிழ்ந்து பின் ஜெருசலத்தில் உள்ள யூத வழி பாட்டில் என கிளை மாறி கொண்டேயிருக்கிறது படத்தொகுப்பு.சூஃபிக்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றான சுழல் நடனம் ஆடும் துருக்கி டெர்விஷ்கள்,இந்த நடனத்தை கற்று மேலை நாடுகளுக்கு அறிமுகம் செய்தவர் என குருட்ஜீஃபை சொல்ல வேண்டும்.ஜெருசலத்தில் உள்ள மாபெரும் கிறிஸ்தவாலயம்,திபெத்திய மடாலயமொன்றில் தீபங்களேற்றி தியானிக்கும் பிக்கு என மாறியபடி நகரும் காட்சிகள் உலகின் வெவ்வேறு நிலவெளிகளில் தோன்றிய புனித நூல்கள் மதங்கள் சடங்குகள் வழிபாட்டு முறைகள் என பரிணமித்திருக்கும் மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன என்ற கேள்வியை வழியெங்கும் இரைத்தபடியே நகர்கிறது.

இயற்கை வளம் நிறைந்த இந்தோனேஷிய மலைப்பிரதேசங்களும்,நெல்வயல்களும் ஒரு கணம் ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' நாவலை நினைவு படுத்தியது.கம்போடியாவின் அங்கோர் வாட்டில் இரண்டாம் சூர்யவர்மனால் 12ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட மிக பிரமாண்டமான கோயில் பிரமிக்க வைக்கிறது.இந்தோனேஷிய பாலி தீவில் உள்ள மக்களால் நிகழ்த்தப்படும் Kecak எனப்படும் ஒருவகை குரங்கு நடனம் சிலிர்க்க வைக்கிறது.ராமாயண காதையின் வானரர்கள் ராமனுக்கு உதவிய நிகழ்வின் வெளிப்பாடு என கூறப்படும் இந்நடனம் அல்லது வழிபாடு மிகவும் விசித்திரமாக இருக்கிறது.ஆண்களின் கூட்டம் ஒரு காதில் பூ சகிதம் கூட்டமாக அமர்ந்து வினோத ஒலிகளையும் உடல் மொழியையும் வெளிபடுத்துகின்றனர்.இந்தோனேஷியா,தாய்லாந்து என ராமாயணம் பல நாம ரூபங்களில் பல நாடுகளில் உலவுகிறது என ஜமாலன் சார் ஒருமுறை கூறியது நினைவு வருகிறது.

கம்போடிய புத்த விகாரகைகள்,பிக்குகள்,வெடித்து ஆறாத அந்நிலவெளியின் எரிமலை,ஆஸ்த்ரேலிய பழங்குடியினரின் விநோத நடனம் மற்றும் வழிபாடு என மாறி மாறி வியப்பிலாழ்த்தியபடி பயணம் செய்கிறது படம். பிரேசிலின் அமேசான் காட்டு பழங்குடியினர்,ஆஸ்த்ரேலிய குகை மனிதர்களின் சுவரோவியங்கள் மற்றும் அபோரிஜின் பழங்குடியினர்,காயோபா பழங்குடியினர் என எளிதில் காண கிடைக்காத பழங்குடியினரின் காட்சிபதிவுகளின் தொகுப்பாக உள்ளது இப்படம்.

எங்கோ இந்தோனேஷிய தொழிற்சாலையில் சிகரெட்டிற்கு புகையிலை சுருட்டும் பெண்கள் அடுத்த காட்சியில் ஜப்பானின் ஏதோ ஒரு நெரிசலான பேரூந்து நிலையத்தில் நின்று புகைத்து கொண்டிருக்கும் ஒரு ஜப்பானியன் என படத்தொகுப்பில் குறுங்கவிதைகளும் முயன்றுள்ளனர்.கம்போடிய சித்ரவதை கூடங்கள்,சித்ரவதை முகாமில் இருந்தோரின் புகைப்படங்கள்,ஜப்பானிய குண்டு வீச்சின் பாதிப்புகளை மௌனமாக நடித்து காட்டும் Butob கலைஞர்,ஆயுதம் ஏந்தி நிற்கும் காவலர்கள்,சித்ரவதை முகாமில் குவிந்து கிடக்கும் மண்டையோடுகள்,எங்கோ ஒரு நகரத்தில் சாலையில் செல்பவனை அழைக்கும் ஒரு பாலியல் தொழிலாளி,கல்கத்தாவின் குப்பை பொறுக்கும் விளிம்புநிலை மனிதர்கள்,பிளாட்பார பிரஜைகள் என மானுட துயரையும் காட்சி படுத்தியபடி விரியும் விவரணைகள் நம்மை நிசப்தமாக்குகின்றன.மத்திய கிழக்கு நாடுகள் குறிப்பாக அதீத கட்டுப்பாடுகள் நிறைந்த சௌதி அரேபியாவின் மக்கா போன்ற பிரதேசங்களிலும் அங்கு நிகழும் தொழுகைகளையும் எப்படி அனுமதி பெற்று படம் பிடித்தார்கள் என்றே வியப்பாக இருக்கிறது.

இந்தியாவில் வாரணாசி போன்ற கங்கை கரையோர சடங்குகளையும் வழிபாடுகளையும் படம் பிடித்துள்ளனர்.ஆப்ரிக்கா,கென்யா,தான்சானியா,அர்ஜெண்டைனா,எகிப்து உட்பட மொத்தம் 24 நாடுகளில் உள்ள மிகப்பழமையான மடாலயங்களையும்,ஸ்தூபிகளையும்,சடங்கு வழிபாடுகளையும் பதிவு செய்திருக்கும் இப்படம் 14 மாத கடுமையான உழைப்பில் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டுள்ளது.பல்வேறு நிலவெளிகளையும், மனிதர்களையும், நாகரீகங்களையும்,துயரங்களையும் ஒருங்கே காணும் மனதில் வறட்டு நாத்திகத்தை புறந்தள்ளி எழுப்பும் அழுத்தமான கேள்வி இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன?

அவசியம் காண வேண்டிய ஒரு அரிய ஆவணப்படம்.




Saturday, February 6, 2010

நித்யகன்னி - எம்.வி.வெங்கட்ராமன்


தி.ஜா,கு.ப.ரா,ந.பிச்சமூர்த்தி,மௌனி,கரிச்சான் குஞ்சு என தொடங்கி தமிழின் சில முக்கிய இலக்கிய மாயாவிகளை உருவாக்கியதில் கும்பகோணத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.என் ஊரிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தொலைவே கும்பகோணம்.அவ்வூரின் மீது ஒரு ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.இவர்களின் வரிசையில் எம்.வி.வி என அழைக்கப்படும் எம்.வி.வெங்கட்ராமனும் இருக்கிறார் என நித்யகன்னி நாவலை திறக்கும் போது தான் தெரிந்தது.அவரை ஏதோ கன்னட எழுத்தாளர் என்று குழப்பி கொண்டிருந்திருக்கிறேன்.
வியாச முனியின் மகாபாரத பெருஞ்சுரங்கத்திலிருந்து நித்யகன்னி என்ற சிறு பாத்திரத்தை எடுத்து கொண்டு கன்னிமை என்ற பரப்புக்குள் நீந்தி எழுந்திருக்கிறார் ஆசிரியர்.யாரையும் போல் எனக்கும் மகாபாரதம் மிகுதியும் செவி வழி கதை தான்.சென்னையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் இருந்த நாட்களில் அங்கிருந்த திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து சில நாட்கள் பாரத வியாக்கியானம் நிகழ்ந்து கொண்டிருந்தது.கர்ண கொடூரமான ஒலி பெறுக்கி இம்சையையும் மீறி அந்த வியாக்கியானம் உள்ளே ஏறி கொண்டேயிருந்தது.இதுபோல் அவ்வப்போது கேட்க வாசிக்க நேரிடும் பாரத கதாபாத்திரங்களும்,பாத்திர சூழ்நிலைகளும்,அக கொந்தளிப்புகளும் பாரதத்தை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிய வண்ணமேயிருக்கிறது.
இன்று வரை நவீன தத்துவங்கள் மற்றும் உளவியல் தீண்டியதும் தீண்டாததுமான பல்வேறு தளங்களை உணர்வு நிலைகளின் பல்வேறு அடுக்குகளை சிகரங்களை அநாயசமாக தீண்டியும் தாண்டியிருக்கும் இப்பெருங்கதையாடல் சமகாலம் வரை ஒரு சராசரி இந்தியனின் அன்றாட வாழ்வையும் போக்கையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது சுலபமாக தவிர்த்து விடக்கூடிய ஒன்றல்ல.மேலும் பாரத வாசிப்பு வெறுமனே கதையின்பத்திற்கானது மட்டும் அல்ல.உலக தத்துவங்களும் விஞ்ஞானமும் காலமெல்லாம் தேடி வரும் மனித இருப்பின் அர்த்தங்களை ஆராயும் ஆய்வு நூல் என்றும் இந்திய நவீன மனதை கட்டமைத்திருக்கும் தொன்ம நினைவின் சத்தும் சாரங்களும் நிரம்பியது என்றும் கூறப்படுகிறது.

கன்னிமை என்றால் என்ன? ஏன் அதன் மீதான கதையாடல்கள் இவ்வளவு நிகழ்ந்திருக்கிறது.வெட்டுதல்,ஒட்டுதல்,கிழித்தல்,தைத்தல் என சரித்திர தையல்காரனின் எந்திரத்தில் நசுங்காத பெண்ணுடல்கள் எத்தனை? புனிதம் என்பது ஏன் பெண்குறியின் நுன் திரையால் நெய்யப்பட்டிருக்கிறது? உலகையே ரட்சிக்க பிறந்தவன் என்பவனை கூட அவனது தாய் ஒரு கன்னி என்ற கதையாடல் மூலம் மட்டுமே நிறுவ முடிகிறது.மேரி எப்படி ஒரு சராசரி பெண்ணை போல் ஆடவனோடு கூடி குலவியொரு ரட்சகனை ஈன்றெடுக்க முடியும்.ரட்சகனை ஈன்று தருபவள் புனிதமானவளாக,ஆளப்படாதவளாக,களங்கப்படாதவளாக,கன்னி மேரியாக மட்டுமே இருக்க முடியும்.புனித ஆவியால் புணரப்பட்டே ரட்சகன் அவதரிக்க முடியும்.அவனை மட்டுமே நம்மால் சிலுவையிலும் அறைய முடியும்.இங்மார் பெர்க்மன் இயக்கிய Virgin Spring கன்னிமையை மையங்கொண்டு கடவுள் விசாரணையாக விரியும் ஒரு அற்புதமான திரைப்படம்.
இதன் உளவியல் ஒரு பக்கம் இருக்கட்டும்.கன்னிமையை அதன் மீதான புனித கற்பிதங்களை புராணங்களும் இதிகாசங்களும் ஒவ்வொரு விதமாய் ஸ்திரமாய் நிறுவியிருக்கிறது.இதில் பாரத பெருங்கதையாடலின் போக்கை ஆசிரியர் அவதானித்துள்ளார்.அதன் ஓட்டத்தில் நிரடும் சிடுக்கிலொன்றை தெரிவு செய்கிறார்.அவள் நித்யகன்னி.நித்யகன்னி என்றும் பதினாறாய் சிவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மார்கண்டேயன் போல் என்றென்றும் கன்னியாக இருக்க தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவள்.அவளொரு ஆடவனை கூடலாம்.கரு தரிக்கலாம்.ஒரு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவள் கன்னியாகவே மாறி விடுவாள்.அவள்
ஒரு போதும் தன் சிசுவுக்கு முலை ஈன முடியாது.ஒரு போதும் அவள் தாய்மையை அடைய முடியாது.அவள் நிரந்தர-நித்ய கன்னி.எனில் இது வரமா ? சாபமா ?

குறிப்பு: நாவலை வாசிக்காதவர்கள் வாசிக்க விரும்புபவர்கள் பின்வரும் மூன்று பத்திகளை தவிர்த்து நான்காம் பத்திக்கு தாவி விடவும்.

காலவ முனிவன் விசுவாமித்திரரின் மாணவன்.குருதட்சனையாக அவர் கேட்கும் ஒரு காது மட்டும் கறுப்பாக உள்ள 800 வெள்ளை குதிரைகளை யாசகம் பெற வேண்டி தர்ம ரூபி யயாதியிடம் செல்கிறான்.நித்யகன்னியான மாதவி அவன் நோக்கம் அறியாமலே அவன் மீது காதல் கொள்கிறாள்.குதிரைகளை யாசகம் தர முடியாத யயாதி காலவனிடம் தன் மகளை தர உறுதியளிக்கிறார்.இவளை கொண்டு உன் குதிரைகளை சம்பாதித்து கொள் எனக்கூறி விடுகிறார்.தான் தேடி வந்த நித்யகன்னி மாதவி என அறியாமலேயே காலவனும் மாதவி மீது காதல் கொண்டு விடுகிறான்.மூன்று மன்னர்களிடம் உள்ள 600 குதிரைகளை பெற வேண்டி அவளை அவர்களுக்கு மணம் செய்வித்து ஒரு குழந்தை பிறந்ததும் அவளை மீட்டு மணம் செய்து கொள்ளும் உத்தேசத்தோடு பயணம் செய்யும் காலவன் மற்றும் மாதவியின் உணர்வுகளை பகடையாக உருட்டியிருக்கிறார் ஆசிரியர்.
குதிரைகளை பெற வேண்டி அவள் மணம் செய்யும் மூன்று கணவர்களில் ஒருவன் சம்போக பிரியன்,மற்றொருவன் தத்துவ வியாக்கியானன்,மூன்றாமவன் மட்டுமே அவளை உள்ளும் புறமுமாக நேசிப்பவன்.உசீநரன் அழகின் உபாசகனாக இருக்கிறான்.நித்யகன்னியின் உடலே நித்ய சௌந்தர்யத்தில் இருக்கிறது.மனோ ரீதியில் அவள் சௌந்தர்யம் இழந்து கொண்டிருப்பவள் என்பதை அவன் மட்டுமே கண்டு கொள்கிறான்.தர்மம் பேனும் யயாதியை,காலவனை,விஸ்வாமித்திரரை என அறத்தின் தர்மத்தின் மனசாட்சியை உலுக்கும் நவீன மனமாக உசீநரன் உருக்கொள்கிறான்.பிறகு அவள் பொருட்டே அவன் கொலையும் செய்யப்படுகிறான்.

இதில் நித்யகன்னியான மாதவியின் நிலை என்ன? மனதில் ஒருவனை காதலனாக வரித்த பிறகும் மூன்று மன்னர்களை மணக்கும் அவள் மன நிலை என்ன? கன்னிமை மீண்டும் கிடைத்து விடும் என்றில்லாத நிலையில் அவளை பிற ஆடவனோடு மணம் செய்விக்கும் எண்ணம் காலவனுக்கோ,யயாதிக்கோ தோன்றுமா? அல்லது மன்னர்கள் தான் அவளை மணப்பார்களா? எனில் கன்னித்தன்மை என்பது வெறும் உடல் சம்மந்தப்பட்டதா? இதை ஒரு கட்டத்தில் மீத குதிரைகளுக்காக விஸ்வாமித்திரரே அவளை மணம் செது கொள்ளும் இடத்தில் ஆழமாக்குகிறார் ஆசிரியர்.மாதவி நீராடுகையில் ரிஷி குல பெண்கள் தெளிவாகவே அதை கூறி விடுகின்றனர்.மாதவிக்கு சித்த பிரமை ஏற்படும் நேரத்தில் வெளிப்படும் அவளது ஆழ் மன உரையாடல்கள் அல்லது உளறல்கள் மூலம் நம்மை உரசுகிறார் ஆசிரியர்.எது அறம்? எது தர்மம் ?

இந்நாவல் உருக்கொண்ட காலமும் சுணங்காத எழுத்தின் வீச்சும் கிளர்வை தந்தது.கன்னிமை குறித்த பிறிதொரு விசாரணையாக ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் இருக்கிறது.காதலித்த பெண் கண்ணெதிரே வேறு ஆடவர்களால் சூறையாடப் பட்ட பின்னர் அவ்வுடல் மீது தோன்றும் அசூயையை மையமாக கொண்டது அந்நாவல்.உடல் மீதான மனம் கொள்ளும் உரிமை அதன் மீதான அதிகாரம் விளைவான அரசியல் என்பதெல்லாம் சுலபமாக சிதைவு கொண்டு விடாது என்பதாலேயே நித்யகன்னி கிளாசிக்காக இருக்கிறது போலும்.இவருடைய பிரசித்தி பெற்ற மற்றொரு நாவல் காதுகள்.அதை தேடி வாசிக்கும் ஆவலை உருவாக்கியிருக்கிறது இந்நாவல்.
நாவல் முன் வைக்கும் கேள்விகள் நுட்பமானவை .நாட்பட்டு புரையோடிய முள்ளாய் இருந்து வலி தர வல்லவை.

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூ