Tuesday, February 5, 2008

சுழலும் இசைத்தட்டு...

தினம் சுழலும்
இந்த இசைத்தட்டின்
அப ஸ்வரங்களினின்று
தப்பி ஓடுகிறேன்....

பாம்புகள் நெளியும்
இந்த பள்ளதாக்குகளின்
பாதைகளெல்லாம்
மீண்டும் என் அறைக்கே
அழைத்து வருகின்றன என்னை...

காடியேறிய
இந்த மதுரசத்தின்
கற்பனை வீதிகள் என்னை
வெறுமைக்குள்
துப்பிவிடுகின்றன....

நிதர்சன நெருப்பில்
வெந்த பாதங்களை
ஊசியால் வருடுகின்றன
கனவுகள்...

ஓர் உச்சம்
ஓர் வீழ்ச்சி
மாபெரும் கடலில்
இடம் தேடும் சிற்றலையாய்
என் ஷனங்கள்...

என் அறைக்குள்
சிக்கிக்கொண்ட
சிட்டுக் குருவியைப் போல
எனக்குள் சிக்கிக்கொண்ட
என்னை விடுவிக்க
ஜன்னல் தேடுகின்றன
என் கண்கள்........

காலத்தின் மீதூறும் நொடிமுட்கள்...

இக்காலப் புரவியின் லகான்
என் கைவசமில்லை...

இலக்கற்ற பயணத்தினின்று
மருண்டு விழுந்ததில்
வலக்கால் சிக்குண்டது
அதன் கற்றை வாலில்...

பாதையின் மூர்க்கம்
பதம் பார்க்க
இழுத்து செல்லப்படுகிறேன்
ஓர் அடிமையைப் போல...

உத்தேசமாக
இப்பயணத்தின்
மீத நாட்கள் 9855
மணி நேரம் 236520
நொடிகள் 85147200...

இடையில்
விபத்து...வியாதி...
இத்யாதி...இத்யாதி...

நிகழ் பயணம்
வசந்த கால வனத்தினூடே
என்பதால்
ஓர் கனவு...

"என் 3 1/2 வயது
முகச் சாயல் கொண்ட சிறுவன்
ஓடுகிறான் ஓர் வயோதிகனிடம்"

அது.....?
அந்த வயோதிகன்..............?

விதிர்விதிர்த்து
கடிகாரம் பார்த்தேன்...
நொடி முட்கள் ஊர்ந்து கொண்டிருந்தது.....