Thursday, April 29, 2010

எழுத்தும் இயக்கமும்...


written & Directed by

கல்லூரி நாட்களில் டைரி தொடங்கி கையில் சிக்கும் காகிதங்களில் எல்லாம் இப்படி தான் கிறுக்கியிருப்பேன்.சினிமா தவிர்த்த ஒரு எதிர்காலத்தை கற்பனை கூட செய்ததில்லை.எப்பொழுதும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் தான்.அடிஷனல் குவாலிஃபிகேஷனாக இருக்கட்டும் என்று அவ்வப்போது வகுப்பில் பெஞ்சை தட்டி டியூன் போட்டு பாட்டும் எழுதுவேன்.தோழிகள் டேய் காலையில குளிக்கும் போது ஒரு பாட்ட ஹம் பண்ணிட்டு இருந்தேன்டா.அப்புறம் தான் அது உன் பாட்டுன்
னே ஞாபகம் வந்தது என உசுப்பேற்றும் பொழுது கொஞ்சம் கிளுகிளுப்பாக தான் இருக்கும்.ஆனால் பசங்க மட்டும் தெளிவு.மறந்து போய் கூட அருகில் வர மாட்டார்கள்.தப்பி தவறி எவனாவது சிக்கினால் ஒரே அமுக்காக அமுக்கி வசனம் சகிதம் திரைக்கதை சொல்ல ஆரம்பித்து விடுவேன்.தமிழ் சினிமா கனவுகளில் இருந்ததாலோ என்னவோ இன்று வரை எதார்த்தம் கிலோ எவ்ளோ தான்.எந்த கதை சொன்னாலும் மச்சி இந்த கதை ஏற்கெனவே அந்த படத்துல வந்துடிச்சிடா என கடுப்பேத்துவான்கள்.அதனால் கதை சொல்ல நம் இலக்கு எப்பொழுதும் தோழிகள் தான்.கடலைக்கு கடலையும் ஆச்சு.மேலும் என் தோழிகள் எல்லாம் எலக்கிய மற்றும் சினிமா செனரல் நாலேஜில் பெரிய முட்டை சைபர் வாங்குபவர்கள் என்பதால் எதை வேண்டுமானாலும் கவலைப்படாமல் அவிழ்த்து விடலாம்.எப்படி தான் இவ்வளவு சகிப்பு தன்மை இவர்களுக்கு உள்ளதோ.

கனவுகளாலான கல்லூரி நாட்கள் கனவை போலவே திடுமென முடிந்த நாளில் எதார்த்தம் பூதம் போல் கோர முகம் காட்டி நின்றது.எனினும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாக நான் முயன்று கொண்டிருந்தேன்.நண்பர்கள் வேலைக்கு மனு போட்டு கொண்டிருந்த பொழுது,நான் சினிமாவிற்காக அலைந்து கொண்டிருந்தேன்.கே.ஏ குணசேகரனை ஒரு முறை பாண்டியில் சந்திக்க நேர்ந்தது.அவர் நாடகம் போன்றவற்றில் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தார்.(அழகி படம் பார்த்து தங்கர் பச்சான் மேல் ஒரு அபிப்ராயம் இருந்தது.)தங்கர் பச்சானிடம் சேர சிபாரிசு கேக்கலாமா என அனுகினேன்.'தம்பி,இன்ஜினீயரிங் முடிச்சுட்டு அதெல்லாம் உங்களுக்கு சுத்தப்படாது.ரொம்ப மோசமான ஃபீல்டு.எதிர்காலத்தை வீணா பணயம் வெக்காதீங்க என அறிவுரை கூறினார்.வேனுமின்னா நம்ம நாடகத்துல அப்பப்போ வந்து கலந்துக்குங்க என தொடர்பு எண்ணெல்லாம் கொடுத்து சென்றார்.அருமை தெரியாமல் அப்பொழுது விட்டு விட்டேன்.பிறகு நாசர் தொடங்கி சிலரும் இதே பதிலை கூறிய பொழுது சோர்வாக இருந்தது.
பொறியியல் விரும்பி படித்ததல்ல.ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்க்க சொல்லி வீட்டில் பிடித்த அடம் ஒன்றும் பலிக்கவில்லை.நாலு எரும வாங்கி வேனா தரேன்.நெதம் நாலு படி பால் கறக்கும்.சினிமா கினிமான்னு கெளம்புனா சோறு கெடைக்காது பாத்துக்க என தந்தைகுலம் கை விரித்து விட்டதால் வேறு வழியின்றி சேர்ந்ததுதான்.

விரும்பிய வாழ்வெல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்ற யதார்த்த விதிக்கு மிக மோசமாக பலியான பின் வேலை தேடுதல்,அலைச்சல் என கனவுகள் எல்லாம் காலாவதியானது.உலக சினிமா,இலக்கியம் என கொஞ்சம் மனசை திருப்பிய பிறகு அப்படியொன்றும் இழக்க கூடாததை இழந்து விட வில்லை என்றும் தோன்றியது.தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சினிமா ஆசையோ அரசியலில் புகும் எண்ணமோ இருக்கிறது.முதலீடு இல்லாமல் குறுகிய காலத்தில் லாபம்/புகழை ஈட்டி தரும் வணிகமாக இவை தானே இருக்கின்றன.லட்சியம்,வெற்றி போன்ற மோஸ்தர்களை விட்டு விலகி வந்து விட்ட பிறகு, நம் வாரமலர்கள் சினிமா பிரபலங்களின் பேட்டிகள் எவ்வளவு அபத்தமான ஒரு
மேடையை கவர்ச்சிகரமாக நமக்கு காட்டுகின்றன என்பதை உணர முடிகிறது.கடந்த 10 வருடங்களுக்கு முன் ஆக விரும்பிய நானாக இப்பொழுது இல்லை நான்.இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு ஆக வேண்டிய நானை பற்றிய எவ்வித கனவுகளும் இல்லை இப்பொழுது.நேதி நேதி என எதையும் நிராகரிக்க பழகிய பிறகு வாழ்வு இலகுவாகவும் சுலபமாகவும் தெரிகிறது.எல்லா அலைவுகளுக்கும் வலிகளுக்கும் பின்னால் இருப்பது என்ன? பிரபலமாகும் ஆசை என்பது அப்படியொன்றும் சுலபமாக விலக்கி செல்ல கூடிய ஒன்றல்ல.ஒவ்வொரு அசைவுக்கு பின்னாலும் ஒளிந்திருக்கும் தன்முனைப்பு எதை தேடி என உணர்வது சுவாரஸ்யமான அனுபவம்.ஒன்றை உண்டு மற்றொன்று வாழும் ஓலம்.எந்த உரிமையில் நான் என என்னை இங்கு முன் வைக்கிறேன் என்பதும் புதிராகத்தான் இருக்கிறது.

பின்னர் இந்த சினிமா குறித்த அலட்டல்களிலிருந்து ஒரு சினிமாவே மீட்டெடுக்கவும் உதவியது.The Star maker என்றொரு படம்.சினிமாவில் நடிக்க ஆள் எடுப்பதாக கூறி ஊர் ஊராக சென்று சபலப்படுபவர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவனை பற்றிய மிக சுவாரஸ்யமான படம்.காலணா இன்றி இந்த சினிமாவை நம்பி பஸ் ஏறிய சொற்ப பிரபலங்களின் அடியொற்றி வாழ்கையை தொலைத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.இன்று இருக்கும் குறைந்த பட்ச சினிமா புரிதல்கள் எதுவுமின்றி ஒருவேளை சினிமாவுக்கு சென்றிருந்தால் என்ன விதமான படங்கள் செய்திருப்பேன் என்ற கற்பனை சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.இப்பொழுது எல்லாம் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறன.விரும்பினால் ஒரு சில வருடங்களுக்குள்ளாக ஒரு படம் செய்து விட முடியும் தூரம் தான்.எனினும் தொலைந்து போன அந்த நானை தேடுவது இனி சிரமம்.திருமணம் முடிந்தால் கதம் கதம்.நண்பர் கதிர் மிஷ்கின் பற்றி சொன்ன போது விளையாட்டாக கூறினேன்.நீங்க படம் எடுத்தா நான் தான் வில்லன் என்று.

புத்தகங்களோடு திரு.பவா அவர்கள் அனுப்பியிருந்த பாலுமகேந்திராவின் கதைநேரம் குறுந்தகட்டில் பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி' சிறுகதை படமாக்கப்பட்டிருந்தது.கதை படித்தவர்களுக்கு மேலே உள்ள ஃபிளாஷ்பேக் ஏன் என புரிந்திருக்கும்.சினிமா என்ற மையத்தை சுற்றி வாழும் கனவுஜீவிகளின் கதை.படம் பார்த்து முடித்தவுடன் கதையையும் வாசித்தேன்.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' சிறுகதையை வாசித்த பொழுது ஆச்சர்யமாக இருந்தது.படம் பார்க்காது இருந்திருந்தால் முதல் வாசிப்போடு எளிதாக கடந்திருக்க கூடிய ஒன்றாகவே பட்டது.எளிய கதை.அக்கதையின் முன்னும் பின்னும் நுண்ணுணர்வோடு நகர்ந்து கதையின் உயிரை ஸ்பஷ்டமாக 'பூ' வாக வெளி கொணர்ந்திருந்த இயக்குனர் சசியின் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.அந்த அனுபவத்திலேயே பா.மகேந்திராவின் கதைநேரத்தையும் அனுகினேன்.ஒரு கதை எப்படி படமாக்கப்படுகிறது மற்றும் திரைக்கதை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல அனுபவம் அளிக்க கூடிய ஒன்று இந்த குறும்பட தொகுப்பு.பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி ' கதை எழுதப்பட்ட காலத்தில் உச்சத்திலிருந்த அமலா,நதியாவெல்லாம் படமாக்கப்பட்ட பொழுது சிம்ரனாகவும்,தேவயானியாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள்.நடப்பில் சிம்ரனும் தேவயானியும் ஃபீல்ட் அவுட் ஆகி விட்ட பிறகும் சினிமா மோகத்தில் பஸ் ஏறியவர்களும்,ஏறி கொண்டிருப்பவர்களும்,கனவுகளும்,ஏமாற்றங்களும் இருந்து கொண்டு தானிருக்கின்றன என்ற உண்மை சுள்ளென அறைகிறது.

ஜெயந்தனின் 'காயம்' என்ற கதையும் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது.வாசிக்கலாம் என்றால் கைவசம் தொகுப்பு இல்லை.சுஜாதாவின் 'நிலம்' சுமாராக இருந்தது.சு.ரா வின் பிரசாதம் சிறுகதை நன்றாக செய்யப்பட்டிருக்கிறது.ஜீனியர் பாலையா அற்புதமாக நடித்திருக்கிறார்.மேல்பார்வை என்ற சு.ரா வின் சிறுகதை தொகுப்பு வீட்டில் கிடக்கிறது.கதைகள் இப்பொழுது மறந்தும் போய்விட்டது.சு.சமுத்திரத்தின் கதை 'காத்திருப்பு' அவரது மற்ற கதைகளை தேடும் ஆர்வத்தை தந்திருக்கிறது.திலகவதியின் ஒரு முக்கோண காதல் கதையும் நன்றாகவேயிருந்தது.பட்ஜெட் மற்றும் அதிகம் வசன வாய்ப்புள்ள கதையாகவே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தோன்றியது.எல்லோருக்கும் அப்படி தோன்றும் என்பதில்லை.தற்பொழுது ஒரு தொகுதி மட்டுமே வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.பிறவற்றையும் பார்க்க வேண்டும்.நல்ல படைப்புகளை தேடி தேடி வெளியிடும் வம்சிக்கு நன்றி.

சு.ராவின் சன்னல் என்ற சிறுகதை வாசித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.மிகவும் பாதித்த அந்த கதையை படமாக்கி பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை.கொஞ்சம் சவாலானதும் கூட.ஒரு பயிற்சியாக குறும்படமாக எடுக்க முயல வேண்டும்.மனோஜின் கச்சை என்ற சிறுகதை,ஜே.பி சாணக்யாவின் பெயர் மறந்து போன ஒரு கதை..இப்படி இந்த குறுந்தகடு பார்க்கும் முன்னாக படமாக்க தோன்றிய பல கதைகள் இப்பொழுது படம் செய்து பார்க்க ஆசையூட்டுகின்றன.பார்க்கலாம்.

இரண்டாம் முறையாக சிரமம் பார்க்காமல் புத்தகம் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி வைத்த திரு.பவா அவர்களுக்கும் கதிருக்கும் என் நன்றியும் அன்பும்.

Thursday, April 22, 2010

இந்த சூர்யோதயம்...

இந்த சூர்யோதயம்
நினைவூட்டுகிறது
ஒரு தபோவன குடிலை
நிசி பிசுபிசுப்பை
பின்னிரவில் நிறமிழந்த நிலவை
இனி
உதட்டு சாயம் பூசி
முறுவலிக்கும் அந்தி
நினைவூட்ட கூடும்
தேகத்தில் ஊர்ந்து சென்ற வெயிலையும்
தாகத்தையும்
இரு துண்டு ஆரஞ்சு சுளைகளையும்...

Monday, April 19, 2010

ஸென் கவிதைகள்...

ஸென்...

ஒன்றுமில்லாதது குறித்து பேச என்ன இருக்கிறது.

பெயரற்ற யாத்ரீகனிலிருந்து மிகவும் பிடித்த சில கவிதைகள்...

சடாரென்று அறையும் காற்றில்
கடைசி இலை
முடிவெடுக்கிறது:
போய்விட்டது.

0---0---0---0

புல்லாங்குழலின் ஓசை
திரும்பி விட்டது
மூங்கில்
காட்டுக்கு.

0---0---0---0

அதே இடத்தில்
மீண்டும் மீண்டும்
கொத்துகிறது மரங்கொத்தி;
தீரவிருக்கிறது
பகற் பொழுது.

0---0---0---0

காற்று எங்கே
தள்ளிச் செல்லுமென
அறிவதில்லை
தாழ மிதக்கும் மேகங்கள்.

0---0---0---0

நெல்வயலில் தேங்கிய நீர்
வெளியேறுகிறது-ஒரு
மீனும் திரும்புகிறது
தன் வீட்டுக்கு.

0---0---0---0

சற்று முன்பிருந்த அன்பும்
புகையிலை விடுக்கும் புகையும்
சிறுக சிறுக
விட்டுச் செல்வது
சாம்பலை மட்டுமே.

0---0---0---0

இரண்டு குமிழிகள்
இணையும் தருணத்தில்
காணாமல் போகின்றன
இரண்டுமே.மலர்கிறது
ஒரு தாமரை.

0---0---0---0

நதியோட்டத்தில்
மிதந்து செல்லும் கிளையில்
பாடிக்கொண்
டிருக்கின்றன
பூச்சிகள், இன்னமும்.

0---0---0---0

வெள்ளிப் பனித்
துளிகளிலும்
இப்படியேதான்,
சிறியதைப் பெரியது
உட்கொண்டு விடுகிறது.

0---0---0---0

கருநிறக் கூந்தலும் செந்நிற முகமும்
எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும்?
ஒரு கணத்தில்
நரை முடிகள் நூல்கண்டுபோலச்
சிடுக்காகும்.
ஜன்னல் மறைப்பைத் திறக்கும்
போது, ஆப்ரிக்காட் மலர்கள்
பூத்திருப்பதைக் காண்கிறேன் :
இதோ இருக்கிறது,
வசந்தத்தின் காட்சி.
தாமதம் செய்யாதே.

0---0---0---0

திட்டவட்டமான விதிகள் இல்லை,
ஜன்னலை எப்போது
திறந்து வைப்பது
எப்போது மூடுவது என்பது பற்றி.
இதெல்லாம்,
நிலவோ பனியோ
தம் நிழல்களை எவ்விதம்
படியவைக்கின்றன என்பதைப்
பொறுத்தது.

0---0---0---0

நேற்றிரவும் அல்ல,
இன்று காலையும் அல்ல -
பூசணிப் பூக்கள் மலர்ந்தது.

0---0---0---0

நினைக்க வேண்டாம் அதை
என்றுதான் நினைக்கிறேன்.ஆனாலும்
நினைத்துவிடுகிறேன்
அதை நினைக்கும்
போது
கண்ணீர் சிந்துகிறேன்.

0---0---0---0

வீழும் இலைகள்
படிகின்றன
ஒன்றின் மேல் ஒன்றாய்;
மழையின் மேல்
பொழிகிறது மழை.

0---0---0---0

காட்டு வாத்துகளுக்குத்
தம் பிம்பத்தைப்
பதியவைக்கும் உத்தேசமில்லை.
நீரும்
அவற்றின் பிம்பத்தைப்
பெற
மனம் கொள்ளவில்லை.

0---0---0---0

அவன்
வனத்தில் நுழையும் போது
புற்கள் நசுங்குவதில்லை
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை.

0---0---0---0

தமிழில் : யுவன் சந்திர சேகர்

உயிர்மை பதிப்பகம்.


Thursday, April 8, 2010

பின்னிரவு புழுக்கங்களும் ஒரு முக் மாஃபியும்...

முடிவிலியில் மிதக்கும் குருவிகளை போல் இல்லையே வாழ்வு என அடிக்கடி எண்ணத் தோன்றும்.குஞ்சு பொறிக்க மட்டுமே கூடு சமைக்கின்றன அவை.ஒரு பொந்துக்குள் சுருங்கி, சதா வருத்தும் வீடு குறித்த நினைவேக்கங்களோடு,வறண்ட இப்பாலை பரப்பில் தனக்கே அந்நியனாக உலவும் இந்நாட்கள் இழந்தவை குறித்த கழிவிரக்கங்களை தருவதாக இருக்கின்றன.வீடு என்பது வெறும் மணல் மற்றும் கற்களால் மட்டுமே ஆனதா என்ன? .தேவைகளின் பொருட்டு வீட்டை துறப்பவன்/ள் நத்தையை போல் சதா சுமந்து திரிகிறான்/ள் சொந்த வீட்டின் நினைவுகளை.எப்பொழுதும் தூரங்களின் மீதான கவர்ச்சியும்,அருகாமையின் மீதான அலட்சியங்களுமாக கழிந்த பொழுதுகள் குற்ற உணர்வுகளை தூண்டுகிறது.தனிமையின் நெறிப்புகளிலிருந்து திரைப்படங்களும் புத்தகங்களும் மட்டுமே சற்று ஆசுவாசம் அளிக்கின்றன.வெகு நாட்களாக கைவசமிருந்தும் பார்த்திராத House of sand and Fog நேற்றைய இரவின் மீது நீண்ட வெறுமையை போர்த்தியது.வீட்டின் புகைப்படத்தை தேடி எடுத்து வெகுநேரம் பார்த்து கொண்டிருந்தேன்.


எதேச்சை
யாக வாசிக்க தொடங்கிய வைக்கம் முகம்மது பஷீரின் 'மதில்கள்' அற்புதமான வாசிப்பனுபவமாக இருந்தது.யாரோ போல் நாட்களை கடத்த பழக வேண்டும் இனி.நல்ல திரைப்படமோ,புத்தகமோ உள்ளேறி நிகழ்த்தும் ரசவாதம் எப்பொழுதும் உறக்கமின்மையிலும் பிறழ்வு நிலையிலுமாக முடிகின்றது.மனம் தான் எவ்வளவு விசித்திரமானது.எப்பொழுதும் சூழல் குறித்த புகார்களை முனுமுனுத்தபடி கச்சிதமாக அதில் பொருந்தவும் பழகி கொள்கிறது.கதையில் நீண்ட மதிலொன்றால் ஆண்களுக்கும் பெண்களுக்குமாக பிரிக்கப்பட்ட சிறைக்குள் பூக்கும் இரு கைதிகளின் காதல் அழகாக விவரிக்கப்பட்டிருந்தது.முகமறியாத அந்த காதலியை பார்க்க இருக்கும் நாளில் அவன் விடுவிக்கப்படும் பொழுது ஆற்றாமையோடு கேட்பான் 'யாருக்கு வேண்டும் இந்த சுதந்திரம்'?.The Shashank Redemption திரைப்படத்தில் வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்து மூப்பெய்திய காலத்தில் விடுவிக்கப்படும் ஒரு வயோதிகர் வெளியேறி வெளி உலகில் தொடர்பு கொள்ள முடியாமல் ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொள்வார்.மதிலுகளில் ஓரிடத்தில் நாயகன் கூறுவான் இது சின்ன சிறை.இதற்கு வெளியே பெரிய சிறை இருக்கிறதென.சற்று முன் உணவருந்தி கொண்டிருந்த பொழுது ஒரு மலையாளி நண்பன் ராஜீவ் கொலை-சதி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நளினி குறித்து கேட்டு கொண்டிருந்தான்.நீண்ட பத்தொன்பது வருடங்கள்.அவர் குழந்தை என்னவாயிற்று.இனி விடுதலை என்பது என்ன விதமாக பொருள் படும் அவருக்கு.என்ன விதமான காட்டுமிராண்டி சமூகம் இது.

சுதந்திரம் என்பதை ஒரு சொல்லாகவே அறிந்திருக்கிறோம்.உடலென்னும் சிறைக்குள் வெளியேற தவிக்கும் பட்டாம்பூச்சி குறித்த பிரக்ஞை எதுவும் இல்லை நமக்கு.எங்கே என்று தெரியாத ஒரு எலி ஓட்ட பந்தயத்தில் அசுர கதியில் கடந்து போகிறது வாழ்வு.அரசியல்,ஒழுக்கம்,மம் என கண்ணுக்கு புலப்படாத நூற்றுக்கணக்கான கண்ணாடி சிறைகளால் சூழப்பட்டிருக்கிறது இருப்பு.நவீன மனிதன் என்பவன் இன்று ஒரு நடமாடும் சிறைச்சாலை.இடைவிடாத அசைவில் இருப்பின் அவஸ்தைகள் மறக்கப்படுகின்றன.

விபத்தொன்றில் சிக்கி அசையா முடியாத படி படுத்தபடுக்கையில் கிடக்கும் ஒருவனது வாழ்வு எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்.இருப்பு எப்பொழுது அர்த்தம் கொள்கிறது என அடுக்கடுக்காக கேள்விகளுக்குள் புதைத்தது The Sea Inside திரைப்படம்.கருணை கொலைக்கு மனு செய்பவனது துயரம்..அறம்,பாவம்,கருணை என்ற கற்பிதங்களோடு அவன் நிகழ்த்தும் போராட்டம் நிலை குலைய வைத்தது.நிதர்சனம் சினிமாவை விட கொடூரமாகவே இருக்கிறது.ஒரு பண்பட்ட சமூகம் தற்கொலையை அங்கீகரிப்பதாக இருக்கும்.மேலும் வலியின்றி உயிரை போக்கி கொள்ள வசதிகள் செய்து கொடுக்கும்.தற்கொலை கோழைத்தனமென்றும் போராட்டமே வாழ்க்கையென்றும் வசனம் பேசும் கோரமான உலகில் இருக்கிறோம்.பல ஆண்டுகளுக்கு முன் ஒரு காமுகனால் கற்பழிக்கப்பட்டு மூளை அதிர்ச்சிக்குள்ளாகி கிட்டத்தட்ட 37 வருடங்களாக கோமாவில் பிரக்ஞையின்றி அவதியுறும் அருணா ஷான்பாக்கை கருணை கொலை செய்யும்படி பல மனிதாபிமானிகள் அரசுக்கு மனு செய்தும் ஆவண செய்யப்படவில்லை இன்னும்.மனிதாபிமானம் என்றால் என்னவென்றே நமக்கு தெரியாது என்பது தான் இதன் பொருள்.கருணை கொலை அங்கீகரிக்கப்படாத உலகில் தற்கொலை முட்டாள்தனமாகவே தோன்றும்.முதுமக்கள் தாழி செய்த மரபு நம்முடையது.

உடல்/இருப்பு சார்ந்து உன்னதம் என எல்லா ஒழுக்க மதிப்பீடுகைகளையும் கவிழ்த்து பார்த்தவை பாசோலினியின் திரைப்படங்கள்,உடல்/மனம் மீதான சமூகம் மதம் மற்றும் அரசியலின் ஒடுக்குமுறைகளை பகடி செய்தவை அவை.இறுதியாக பார்த்த அவரது 120 Days of sodom மனக் கொடூரத்தின் வரைபடம் போல் இருந்தது.மண்டைக்குள் வண்டு புகுந்ததான நமைச்சலில் வெகு நேரம் நெளிய வைத்தது.ஒரு கட்டிடத்திற்குள் அடைக்கபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் மீதான அதிகாரத்தின் பாலியல் வன்முறையை முழு திரைப்படமாக்கியிருக்கிறார்.காமத்தின் மீதான மதங்களின்/அதிகாரத்தின் ஒடுக்குமுறைகள்,காமம் குறித்த குற்ற உணர்வுகளை கட்டமைப்பதன் மூலம் இருப்பை ஒரு புள்ளிக்குள் ஒடுக்கும் சமூக தந்திரம்.பாவம்,மறுமை போன்ற சொல்லாடல்கள் மூலம் விளிம்புக்கு நகர்த்தப்பட்ட இருப்பை மையத்திற்கு இழுத்து வருகின்றன இவரது படங்கள்.தனி மனித மனச்சிக்கல்களுக்கு பெரும்பாலும் காமம் சார்ந்த குற்ற உணர்வுகளே காரணங்களாக இருக்கின்றன.குற்ற உணர்வுகளோ தீர்ப்புகளோ அற்ற மனித வாழ்வு எப்படியிருக்கும்.Perfume படத்தில் வரும் பொது வெளியில் நூற்று கணக்கில் கவலையின்றி மக்கள் புணர்ந்து திளைக்கும் இறுதி காட்சி தான் மனத்திரையில் ஓடுகிறது.சொர்க்கம் பற்றிய கதையாடலை காட்சியாக்கி பார்த்த படம் அது.

Anti christ - ல் கணவனுடனான புணர்ச்சியின் உச்ச கட்ட பொழுதில் கண்ணெதிரே சன்னல் வழி தவறி விழுந்து இறந்து போகும் தன் குழந்தையின் மரணத்திற்கு தன் உடலின்ப விழைவே காரணம் என குற்ற உணர்வு கொள்ளும் தாய் தன் கிளிட்டோரியசை வெட்டி எறிவதன் மூலம் அதை கடக்க முனைகிறாள்.துரோகம் என்ற கண்ணியுனூடாக உடலை/இருப்பை விசாரிக்கும் நகிசா ஒஷிமாவின் in the realm of passion ம், உடலை அதன் எல்லை வரை செலுத்தி இறுதியில் வெறுமையில் தன் காதலனின் குறியை அறுத்தெறியும் in the realm of senses ம் தந்த அயர்ச்சியும் மன உளைச்சலும் கேள்விகளும் தாங்கொணாதவை.நிதர்சனத்தை பேசும் எந்த பிரதியும் லகுவான இருப்பின் சமநிலையை அந்தகாரத்தில் வீசி நடுங்க செய்வதாகவே இருக்கிறது.எல்லாம் யோசிக்கும் வேளையில் பெரியார் ஏன் அடிக்கடி வெங்காயம் என்றார் என்பது மட்டும் புரிகிறது.

டெஸ்க்டாப்பில் இருந்த இந்த பத்தியை சற்று முன் வாசித்த என் நண்பன் ,'என்ன ஒரே கொலை தற்கொலைன்னு எழுதிருக்க..சூசைட் எதாவது பண்ணிக்க போறியா?' என கலவரமாக கேட்டான்.சிரிப்பை அடக்கி கொண்டு ஆமாம் என பாவமாக சொல்லி வைத்தேன்.பேயறைந்தது போல் பார்த்தவன் பின் 'நீ ஒரு முக் மாஃபி' என திட்டிவிட்டு போனான்.முக் மாஃபி என்றால் அரபியில் மூளையில்லாதவன் என பொருள்.