Thursday, March 12, 2009

நீல வெயில்...


கிளையில் ஊர்ந்த கூட்டுப்புழு
சட்டென பறந்தது தும்பியாகி
மௌனமாகி விட்டன
விட்டுச்சென்ற அதன் வண்ணங்களும்
கிளை பூ வாசனையும்...

உரசாமல் செல்லும் சருகுகளை
இலைகளை மீன்களை
சலனமற்று பார்க்கிறது
நதியில் மிதக்கும் நிலா
மேலும்,
ஒருபோதும் நனையாதது குறித்து
அதற்கு வருத்தமுமில்லை...

சுவர் மோதி மீளும்
உன் சொல் கரையும் வெளியில்
உடைமாற்ற காத்திருக்கிறதென்
கவிதை...

வேரறுந்து மேலெழும்
தாவரத்தையொத்து
நானொரு முத்தமாகிறேன்,
கொத்த காத்திருக்கும்
உன் கூரலகு இடைவெளியில்
மீன்களாகிறது என் கண்கள்...

இப்படியாக,
நேற்றிரவு
ஒரு நீல வெயில்
எனை நனைத்து சென்றது...