Saturday, October 6, 2012

மழை ஓய்ந்த வேளையில்...

யாரேனும் இப்படி அறைந்து
சொல்ல வேண்டியிருக்கிறது...

தன் குரலை நெரிக்கும்
கைகளை தானே
எப்படி நெகிழ்த்தி கொள்வதென்று

மூச்சிரைக்கும்
கொடுங்கனவிலிருந்து சட்டென
எப்படி விழித்து கொள்வதென்று

தன் முகம் கண்டு
தேம்பும் குழந்தையை
ஏன் தேற்ற முயல கூடாதென்று

பனித்துண்டை போல்
மௌனத்தை ஏன்
கரைய விடக்கூடாதென்று

அறிமுகமற்ற வீதிகளில் ஏன்
அழுது திரியக்கூடாதென்று

மனுஷ்யபுத்திரனை போல்
ஏன் கவிதை எழுத முடியாதென்று

சருகை போல்
எந்த கிளை விட்டும்
உதிர்ந்து கொள்ள முடியுமென்று

இறந்த கால நண்பனோடு
தேநீர் அருந்த முடியுமென்று...