Friday, January 16, 2009

எனினும் புலரும் பொழுது....

நிறை பரிதியுலா நிசியில்
இரை தேடுமோர் சர்பம்
சருகிடை நெளிந்தூர்கிறது...

பராபரக் காதலனின்
தியான நிஷ்டையில்
ஆடிக்களைத்த ரம்பா
ஆடை மாற்றிக்கொண்டிருந்தாள்...

கன்னியில் சிக்குண்ட
நாரை ரெண்டை
வளைக்குள்ளிருந்து
வேவு பார்க்கிறது
வயல் நண்டு...

இறுகப் புணரும்
கிணற்றுத்தவளைகளை
குறும்பாய் எட்டிப்பார்த்தவள்
களுக்கென அவை ஆழம் புகவே
அலையலையாய் சிரிக்கிறாள்...

ஏதோ அவசரமாய் சொல்ல
அரைவேக்காட்டில் எழுந்தவனை
மடாரென விறகால் அடித்து
மீண்டும் தூங்க வைத்தான்
மயானச் சித்தன்...

யாவும் கண்டு
மெல்ல உறங்குது இரவு
எப்பொழுதும் போலவே
இயல்பாய் புலர்கிறது பொழுது...

Thursday, January 8, 2009

சொற்களற்ற இரவுகளில்....

வெகு நேரமாய்
இணையை துரத்துகிறதொரு
சுவர்க்கோழி....

சலனமற்று தியானிக்கிறது
அறை மூலையில்
சிலந்தியொன்று....

வெற்று சுவரில்
புலப்படுகின்றன
நடனமாடும் ஓவியங்கள்....

மின் விசிறி அலைவுகளில்
நெளியும் திரைச்சீலையிடுக்கில்
நுரைக்கிறாள் நிலா....

சட்டென மின்சாரம் அறுந்துவிடும்
தருணங்களில்
எடையற்று மிதக்கின்றன
சொல்ல ஏதுமற்றவனின் சொற்கள்....

துல்லியமாய் கேட்கிறது
தெறிக்கும் ஹீக் சப்தம்....