Wednesday, March 12, 2008

தாத்தா...

தகவலறிந்து வீடு வந்த பொழுது சங்கூதி தின்னையில் வாசித்து கொண்டிருந்தான்.கூடத்திலிருந்து அத்தை மற்றும் உறவினர்களின் விசும்பலுடன் கூடிய சன்னமான புலம்பல் கேட்டுக்கொண்டிருந்தது.உள்ளே நுழைந்தவுடன் அத்தை எழுந்து வந்து கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.சிறிது நேரம் மௌனமாக நின்றேன். தாத்தாவை நாற்காலியில் அமரவைத்து வாயையும் கால்கட்டை விரல்களையும் வெள்ளை துணியால் கட்டியிருந்தனர்.கடிகாரம் நிறுத்தப் பட்டு அவர் இறந்த நேரத்தை காட்டிக்கொண்டிருந்தது.எனக்கு அழத்தோன்றவில்லை.6 மாதங்களாக எதிபார்க்கப்பட்ட மரணம்.மூலையில் விள்க்கு ஏற்றப்பட்டிருந்தது.ஊதுவத்தி வாடையோடு செண்ட் மணம் கலந்து வந்தது.எனக்கு இர்ண்டும் ஒவ்வாது.மெல்ல விலகி திண்னைக்கு வந்தமர்ந்தேன். சென்ற வருடம் பாட்டி இறந்து போனாள்.புற்றுநோய்.நீண்ட நாட்களாக யாரிடமும் கூறாமல் உள்ளூர் மருத்துவரிடம் வயிற்று வலி மாத்திரை வாங்கி உண்டிருக்கிறாள்.கண்டுபிடிக்கப்பட்டபோது அபாய கட்டத்தை நெருங்கியிருந்தாள்.இறக்கும் வயதெல்லாம் இல்லை.வெறும் 58.அவளுக்கு இறக்க மனமுமில்லை.5 மகன் 4 மகள்,பேரன் பேத்திகள்,நிலம்நீட்சி,என நிறைந்த அதிகாரத்தோடு வாழ்ந்தவள்.இறக்கும் அன்று வரை வங்கியில் அவள் பெயரில் இருந்த பணத்தை எடுக்க சம்மதிக்கவில்லை."ஏன்?எனக்கொன்றுமில்லை.சரியாகிவிடும்" என்று கூறினாள். நான் தாத்தாவையே கவனித்து கொண்டிருந்தேன்.வாழ்ந்த காலங்களில் அவர்களுடைய தினப்படி சண்டைகளை பார்க்கும் பொழுது இவர்களுக்கு எப்படி 9 குழந்தைகள் பிறந்தன என எனக்கு சிரிப்பு வரும்.பாட்டி தாத்தாவை அழைத்து நடுங்கும் கரங்களால் அவரது விரல் பற்றியபோது குலுங்கி அழுதார்.எனது 25 வதில் அவர் அழுது அன்று தான் பார்த்தேன்.பாட்டி எந்த ஷனத்தில் இறந்தாள் என எனக்கு தெரியாது. தாத்தா வேடிக்கை குணம் கொண்டவர்.அவருடன் தச்சு வேலைக்கு வரும் சிறுவன் கூட அவரை கேலி செய்வான் எனினும் அவருக்கான மரியாதையையும் தரத்தவறியதில்லை ஒருவரும். பாட்டி இறந்த 6 மாதங்களில் அவர் காலில் ஆணி ஒன்று குத்திவிட்டது.தொடர்ந்து காய்ச்சல் வந்தது.கோடையில் குளிர்கிறதென அவர் கம்பளி போர்த்தி படுத்திருந்தார்.தாத்தாவின் நண்பொருவர் இருக்கிறார்.அவரும் நகைச்சுவை உணர்வுள்ளவர்தான்.தாத்தாவை பற்றி நிறையக்கூறுவார்.சிறுவயதில் தாத்தா மிகவும் துஷ்டனாம்.வீட்டில் உள்ளவர்கள் சாப்பாடு தரவில்லையெனில் தண்ணீர் பாம்புகளை பிடித்து வந்து வீட்டுக்குள் விடுவாராம்.நிறைய பெண்தொடர்பு.திருமணமாகும் வரை ஒரு விதவையோடு வாழ்ந்திருக்கிறார். தாத்தாவின் உடல் நலம் குறைந்து கொண்டேயிருந்தது.மருத்துவர்கள் நோய் ஒன்றுமில்லையென்றனர்.கேள்விகளுக்கெல்லாம் மருந்தெழுதித் தந்தனர்.மரணத்தின் விசித்திரம் புரியாதது.சில வருடங்களுக்கு முன்பு கார்த்தியொன்றொருவன் ஊரில் இருந்தான்.அவன் நண்பன் இறந்த இரண்டே நாட்களில் இவனும் தற்கொலை செய்துகொண்டான்.உங்களால் நம்ப முடியாதுதான்.ஆனாலும் உண்மை.கார்த்தி அவன் நண்பன் இறந்த பொழுது அழவில்லையாம்.எங்கோ வெறித்தபடி யாருக்கோ பதில் கூறும் தோரணையில்"ம்..ம்..சரி.."என தனக்கு தானே பேசிக்கொண்டிருந்தானாம்.அவன் அம்மா கூறினாள்.இறந்த அன்று காலையில் எல்லோரிடமும் அன்பாக பேசியிருக்கிறான்.அவன் தங்கைக்கு புது சுடிதார் வாங்கி தந்திருக்கிறான்.மிக நிதானமாக இரவு உணவு கொண்டிருக்கிறான்.நடு இரவில் தோப்பிற்கு சென்று(அங்குதான் அவன் நண்பன் இறந்து கிடந்திருக்கிறான்) உயர்ந்த புளிய மரமொன்றில் உச்சிக்கிளையில் தூக்குப் போட்டுக்கொண்டான்.கயிற்றை அவன் பல கிளைகளின் குறுக்கே கட்டியிருந்தான்.எந்த வகையிலும் அறுந்து விடாதபடி.கார்த்தியை தேடிய பொழுது விஷ்னு மட்டும் இழுக்கப்பட்டவன் போல் தோப்பிற்கு ஓடினான்.நாங்கள் சென்ற பொழுது கார்த்தி இடவலமாக ஆடிக்கொண்டிருந்தான்.5 நிமிடம் முன்னதாக வந்திருந்தால் கூட காப்பாற்றியிருக்க முடியும்.விஷ்னு விருவிருவென்று ஏறி கத்தியால் கயிற்றை துண்டித்து கார்த்தியை தோளில் சுமந்து இறக்கினான்..நாக்கு வெளியேறி மிகக்கோரமாக காட்சி தந்தான்.இறந்து விட்டிருந்தான்.
தாத்தா உடல்நலம் மோசமாகிக் கொண்டே வந்தது.அதுகுறித்து துக்கம் எதுமின்றி இருந்தார் அவர்.அவரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தோம்.மாடியில் உள்ள எனதறைக்கு அருகில் கூடத்தில் அவருக்கு கட்டில் சகிதம் சகல வசதிகளும் வழங்கப்பட்டிருந்தது.இரவு முழுதும் விழித்திருந்து பகலில் உறங்குவார்.அவ்வப்போது பீடி பற்ற வைத்து கேட்பார்.இரண்டு இழுப்பிற்கு மேல் முடியாமல் போட்டுவிடுவார். ஒரு நாள் உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்தேன்.தாத்தா எனதறைவாசலில் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.என் உடல் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது.அவரால் தனியாக நடக்க முடியாது."என்ன தாத்தா"? என்றேன்.பதிலேதும் கூறாமல் அவர் திரும்பி சென்று படுத்துக் கொண்டார்.எப்படி நடக்கிறார் என்ற கேள்வி எனக்கு பயத்தை உண்டாக்கி இருந்தது. அவரது இயற்கை உபாதைகளை அம்மாதான் கவனித்துக் கொண்டாள்.மாமனாருக்கு சேவையில் ஒருபோதும் முகம் சுளிக்கவில்லை.மாறாக படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார் என்ற என் வசைக்கு கடுமையான கண்டனம் தெரிவிப்பாள்.பெண்களின் மீதான மரியாதை புத்தகத்திலிருந்து வரவில்லையெனக்கு.என் அம்மாவிடமிருந்து. நடுயிரவில் எழுந்து சிறுநீர் கழிக்க செல்லும் பொழுது கவனிப்பேன்.தாத்தா இருளில் வெற்றிடத்தோடு பேசிக்கொண்டிருப்பார்.வெகு தீவிரமாக.சில சமயம் அவரை கைத்தாங்கலாக கழிவறை கூட்டிச்செல்லும் முன்னரே என் மீது சிறுநீர் கழித்து விடுவார்.மெல்ல மெல்ல அவர் என்னிடமிருந்த அசூயை உணர்வை அவரது சிறுநீரால் கழிவி விட்டார். கல்லூரி தேர்வு விடுமுறை நாட்களில் நிகழ்ந்தவை இவையெல்லாம்.அவர் இறுதியாக என்னிடம் கேட்டது மெது பகோடா.இப்பொழுது என் சிந்தனையெல்லாம் பாட்டி ஒருமுறை என்னிடம் தீவிரமாக கூறியதைப் பற்றித்தான்."தாத்தாவுக்கு முன்னாடி நான் போய்ட்டேன்னா தாத்தாவையும் எங்கூட கூப்டுக்குவேண்டா.நான் போயிட்டா அவர யாரு பாத்துப்பா" ?

0 comments: