Saturday, May 22, 2010

காட்டை வரைபவன்...

தன் தூரிகையில் பச்சையம் நனைத்து காட்டை வரைபவன் மரங்களை உயிர்ப்பிக்கிறான்.மெல்ல மெல்ல இலைகள் அசைந்து அவன் தலை கோதின.சூரியன் நிறமிழக்க தொடங்கியது.மழையில் நனைந்தும் குளிரில் நடுங்கியும் வனப்பட்சிகளின் ரீங்காரத்தினூடே அவன் ஓவியத்தை வளர்த்தான்.நகர்ந்து கொண்டேயிருந்த நிலவை கொடிகளால் கட்டி ஒரு மரத்தில் தொங்க விட்டான்.கூடு திரும்பும் பச்சைக்கிளிகள் கொத்தி உடைத்தன அதன் விளிம்பை.இரவையும் பகலையும் அவன் நிறங்களால் நனைத்தபடி அவ்வனத்துள் கரைந்து போனான்.நீலியொருத்தியை வரைந்து அவளோடு வாழ்ந்தான்.பின்னொரு காலை பொழுதின் கடைசி நட்சத்திர மினுக்கலில் தன் அறை திரும்ப எண்ணினான்.அவ்வனம் விட்டு காணாமல் போன வண்ணத்து பூச்சியொன்று சிறகொடுங்கி அமர்ந்திருந்தது அவன் அறை மேசையின் ஒரு பிளாஸ்டிக் பூ மீது.மீண்டும் வனம் புகுந்தவன் பிறகு ஒரு போதும் தன் ஓவியம் விட்டு வெளியேற விரும்பவில்லை...

6 comments:

said...

கிறுக்கல் நல்லா இருக்கு ஆனா ஏன் முடிக்காம ஒரு முழுமை இல்லாம போஸ்ட் பண்ணிட்டீங்க ????????????????????????????????????

said...

nice..

said...

நல்ல கவிதை, வாழ்த்துக்கள் ..

said...

நல்லா இருக்கு வாழ்த்துகள்

said...

நல்லா இருக்கு ....அந்த வண்ணத்து பூச்சி என்ன ஆச்சு ?

said...

நன்றி நண்பர்களே..

எழுதும் போது முடிக்கனும்னு தோணல நேசன்..வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல.

நன்றி பத்மா..பிளாஸ்டிக் பூக்களில் அமரும் வண்ணத்து பூச்சிகளுக்கு என்ன நேருமோ அதுவே அதற்கும் நேர்ந்திருக்கலாம்.வனம் புகுந்தவன் வேறெதுவும் சொல்ல மறுத்து விட்டான்.