Sunday, March 16, 2008

ஒரு கோடைமழையும் இரண்டு சிக்கிமுக்கி கல்லும்...

கோடை மழைபோல் நிகழ்கிறது
நம் தனிமைப் பொழுதுகள்
முன்னறிவிப்பு ஏதுமின்றி...

குளிரூட்டப்பட்ட எனதறையின்
சன்னலிடுக்கு வழி கசியும் வெயிலாய்
கிசுகிசுக்கின்றன
கனவில் நாம் முயங்கிய கணங்கள்...

நெற்றியில் துளிர்க்குமுன் வியர்வையும்
உள்ளடங்கும் தொண்டைக்குழியும்
நிச்சயிக்கின்றன உன் தாபத்தை...

தாழிட்ட கதவின் சாவிதுவாரமும்
சிமிட்டாத சுவர்க்கண்களும்
பரிகசிக்கின்றன நம் பயத்தையும்
துடித்ததிரும்
மார்பொலியின் துல்லியத்தையும்...

கூடிப்பிரிந்த சுவர்க்கோழிகள்
இரை தேடி நகருமோர் நொடியில்,

உனக்கும் எனக்குமிடையே
கனத்து நிற்கும் மௌனச்சுவரை
தகர்க்க முடியாது நானும்,
மார்பிலுருத்துமுன் தாலிச்சரடை
கடக்க முடியாது நீயும்
தவிர்க்கிறோம்
விழியுரசலின் சிக்கிமுக்கி நெருப்பை...

வீணே நழுவும் பொழுதின்
துயரங்கலந்தவுன் பெருமூச்சும்
பிசிரடர்ந்த என் சொற்களும்
மோதி உடையும் கதவு திறந்து
நடக்கிறாய் நீ...

வருகிறான் பார் ஒழுக்கசீலனென
நகைக்கும் கண்ணாடி கடந்து
கழிப்பறை கதவு திறக்கிறேன்
நனையாத கழிவிரக்கத்துடன்...

1 comments:

said...

ஹ்ம், நன்று.

அனுஜன்யா