Monday, April 19, 2010

ஸென் கவிதைகள்...

ஸென்...

ஒன்றுமில்லாதது குறித்து பேச என்ன இருக்கிறது.

பெயரற்ற யாத்ரீகனிலிருந்து மிகவும் பிடித்த சில கவிதைகள்...

சடாரென்று அறையும் காற்றில்
கடைசி இலை
முடிவெடுக்கிறது:
போய்விட்டது.

0---0---0---0

புல்லாங்குழலின் ஓசை
திரும்பி விட்டது
மூங்கில்
காட்டுக்கு.

0---0---0---0

அதே இடத்தில்
மீண்டும் மீண்டும்
கொத்துகிறது மரங்கொத்தி;
தீரவிருக்கிறது
பகற் பொழுது.

0---0---0---0

காற்று எங்கே
தள்ளிச் செல்லுமென
அறிவதில்லை
தாழ மிதக்கும் மேகங்கள்.

0---0---0---0

நெல்வயலில் தேங்கிய நீர்
வெளியேறுகிறது-ஒரு
மீனும் திரும்புகிறது
தன் வீட்டுக்கு.

0---0---0---0

சற்று முன்பிருந்த அன்பும்
புகையிலை விடுக்கும் புகையும்
சிறுக சிறுக
விட்டுச் செல்வது
சாம்பலை மட்டுமே.

0---0---0---0

இரண்டு குமிழிகள்
இணையும் தருணத்தில்
காணாமல் போகின்றன
இரண்டுமே.மலர்கிறது
ஒரு தாமரை.

0---0---0---0

நதியோட்டத்தில்
மிதந்து செல்லும் கிளையில்
பாடிக்கொண்
டிருக்கின்றன
பூச்சிகள், இன்னமும்.

0---0---0---0

வெள்ளிப் பனித்
துளிகளிலும்
இப்படியேதான்,
சிறியதைப் பெரியது
உட்கொண்டு விடுகிறது.

0---0---0---0

கருநிறக் கூந்தலும் செந்நிற முகமும்
எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும்?
ஒரு கணத்தில்
நரை முடிகள் நூல்கண்டுபோலச்
சிடுக்காகும்.
ஜன்னல் மறைப்பைத் திறக்கும்
போது, ஆப்ரிக்காட் மலர்கள்
பூத்திருப்பதைக் காண்கிறேன் :
இதோ இருக்கிறது,
வசந்தத்தின் காட்சி.
தாமதம் செய்யாதே.

0---0---0---0

திட்டவட்டமான விதிகள் இல்லை,
ஜன்னலை எப்போது
திறந்து வைப்பது
எப்போது மூடுவது என்பது பற்றி.
இதெல்லாம்,
நிலவோ பனியோ
தம் நிழல்களை எவ்விதம்
படியவைக்கின்றன என்பதைப்
பொறுத்தது.

0---0---0---0

நேற்றிரவும் அல்ல,
இன்று காலையும் அல்ல -
பூசணிப் பூக்கள் மலர்ந்தது.

0---0---0---0

நினைக்க வேண்டாம் அதை
என்றுதான் நினைக்கிறேன்.ஆனாலும்
நினைத்துவிடுகிறேன்
அதை நினைக்கும்
போது
கண்ணீர் சிந்துகிறேன்.

0---0---0---0

வீழும் இலைகள்
படிகின்றன
ஒன்றின் மேல் ஒன்றாய்;
மழையின் மேல்
பொழிகிறது மழை.

0---0---0---0

காட்டு வாத்துகளுக்குத்
தம் பிம்பத்தைப்
பதியவைக்கும் உத்தேசமில்லை.
நீரும்
அவற்றின் பிம்பத்தைப்
பெற
மனம் கொள்ளவில்லை.

0---0---0---0

அவன்
வனத்தில் நுழையும் போது
புற்கள் நசுங்குவதில்லை
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை.

0---0---0---0

தமிழில் : யுவன் சந்திர சேகர்

உயிர்மை பதிப்பகம்.


1 comments:

said...

"வார்த்தைகளை சுமந்த கவிதைகள்
வாழ்வின் மீது பயணம் செய்கிறது"