Thursday, March 6, 2008

ஒரு காந்தமும் திசைமுள்ளும்...

மிதந்து இறங்குகிறாய்
என் இரவின் தாழ்திறந்து...

உன் சிறகசைவின் மீயொலியில்
சடசடக்கின்றன வௌவால்கள்
எனதறைவிட்டு வெளியே...

உனது நறுமணத்திற் கூடும்
மின்மினிகளால்
நிறைகிறதென் அறை...

மொழியற்றதிருமுன்
உத்தரவில் அவிழ்கின்றன
சன்னலோர மொட்டுக்கள்...

உன் புலம் நோக்கி
விரியுமென் விசைக்கோடுகளில்
சுழல்கிறது திசைமுள்...

கண்டறியா கிரகமென
உன் ஒளி நிறைந்து
ஜொலிக்கிறதென் அறை...

பிறைவிழி சொக்க
உள் நுழைகிறாய்
என் போர்வை அகழ்ந்து...

மிதக்கிறேன் நானும்
உனது கனவில்
ஆசீர்வதிக்கப்பட்டவனாய்...

0 comments: