Sunday, August 17, 2008

மழலை விளையாட்டு...

அழுத அக்குழந்தையிடம்
கிலுகிலுப்பை ஒன்றை
கொடுத்தேன்
அது சிரிக்க தொடங்கிய போது
வெடுக்கென பிடுங்கிக் கொண்டேன்
மீண்டும் அழுத அக்குழந்தை
கிலுகிலுப்பையை தூர எறிந்து விட்டு
என்னை எடுத்துக் கொண்டது....

மீனாய் சமைந்தவன்...

துயிலொரு பெருங்கனவான
பின்னிரவில் பற்றியெரியுமென்
குகையறைச் சுவரில் வழியும்
குமிழிரவை விழி பொருத்தி
நிலங்குளிர மழையருள
பிரார்த்தித்தேனவளை...

தடாகம் விட்டெழுந்தாள்
தவங்கலைந்த பெருந்தேவி
நதி சூழ்ந்த என் வீதி வழி
பவனி வந்தாள் யாழதிர
தன் கமல ஓடத்திலமர்ந்து...

தழலிருகும் குருதியின்
நினவாடை நுகர்ந்து
விரகம் கொடிதென முனுமுனுத்தாள்...

பெய்யென்றாள்
பெய்தமழை குகையறையுள்
குளம் வளர்த்தாள்
நீர்வெளிக்குள் மூழ்கியவள்
முகமுரசி அகங்கெடுத்தாள்...

இருளாய் இருக்கிறதென்றேன்
இருவிழியில் அகல் சுடர்ந்தாள்...

கரமொன்றை நீட்டியவள்
வாவென்றாள் வசமிழந்தேன்...

வரமென்ன வேண்டுமென்றாள்
ஒளியுதட்டில் முத்தமென்றேன்...

இதழ்கடையில் சினந்துடிக்க
பெருந்தேவி நானென்றாள்
இருந்துவிட்டுப் போயென்றேன்...

முடிவாய் சொல்லென்றாள்
முத்தம் முத்தமென்றேன்...
மீனாய் கடவ என சபித்து மறைந்துவிட்டாள்...

Wednesday, August 13, 2008

துயர நடனம்....(Dancer in the dark)


கேளடி கண்மணி படத்தில் வரும் கற்பூர பொம்மையொன்று பாடலை எப்பொழுதும் இரண்டு வரிகளுக்கு மேல் என்னால் பாட முடிந்ததில்லை.சட்டென்று குரல் உடைந்து விடும்.இந்த படத்தையும் இனி என்னால் ஒரு போதும் பார்க்க முடியாது என நினைக்கிறேன்.

ரோமன் போலன்ஸ்கியின் oliver twist க்குப் பிறகு நான் பார்த்த மிகச்சிறந்த மெலோடிராமா படம் இதுதான்.கதை அமெரிக்க கிராமமொன்றில் நிகழ்கிறது.செக்கோஸ்லோவியாவைச் சேர்ந்த செல்மா தன் மகனது கண் அறுவை சிகிச்சைக்காகவும் அதற்க்கான பணம் திரட்ட வேண்டியும் தன் மகன் ஜீனோடு அமெரிக்காவில் குடியேறி வசிக்கிறாள்.சிறிய தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கிறாள்.தின சம்பளத்தை சேமிக்கிறாள்.
தனது வீட்டின் உரிமையாளன் தன் மனைவியின் ஊதாரித்தனமான செலவினால் தான் கடன் காரன் ஆகிவிட்டதாகவும்,விரைவில் தன் சொத்துக்கள் பறிபோய்விடும் என்றும் கூறுகிறான்.செல்மா அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.மேலும் பரம்பரையாக தொடரும் நோயினால் தான் பார்வை இழந்து கொண்டு வருவதாகவும் விரைவில் முற்றிலும் தனக்கு பார்வை இல்லாது போய்விடுமென்றும் கூறுகிறாள்.இந்நோயிலிருந்து தன் மகனை காக்கவே தான் இரவு பகல் பாராது உழைப்பதாகக் கூறுகிறாள்.
மேலும் இதுவரை பகிர்ந்து கொள்ளப்பட்ட ரகசியங்களை வெளியே கூறுவதில்லையென இருவரும் சத்யம் செய்து கொள்கின்றனர்.செல்மா தினசரி வாழ்வில் நிகழும் இரைச்சல்களில் இசையை கண்டறிகிறாள்.கடந்து போகும் ரயிலோசை,இயந்திரங்கள் எழுப்பும் சப்தம் யாவும் இசைதான் செல்மாவுக்கு.மேலும் பகற்கனவுகளில் மூழ்கி பாடல் பாடுபவளாகவும் இருக்கிறாள்.செல்மாவுக்கு மெல்ல மெல்ல பார்வை முற்றிலுமாக போய்விடுகிறது.இக்குறைபாட்டினால் ஏற்படும் விபத்துக்கள் அவளை வேலையிலிருந்து துரத்துகிறது.தனது இறுதி நாள் சம்பளத்தோடு வரும் செல்மா தனது சேமிப்பு பெட்டியை எடுக்கிறாள்.அதில் பணம் இல்லாதது கண்டு தனது வீட்டின் உரிமையாளரும் நண்பருமான பில் ஐ தேடிப்போகிறாள்.
பில் குற்ற உணர்வோடு அமர்ந்திருக்கிறான்.செல்மா தன் பணத்தை தந்து விடுமாறு வேண்டுகிறாள்.பில் பிறகு தருவதாகக் கூறுகிறான்.தன் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இன்று பணம் தர வேண்டும்.இனியும் தாமதிக்க முடியாது எனக் கூறுகிறாள்.பில் துப்பாக்கி முனையில் அவளை மிரட்டுகிறான்.எதிர்பாராத விதமாக பில் காயமுறுகிறான்.மேலும் பார்க்க முடியாத செல்மாவிடம்.தன்னை முழுவதுமாக கொன்றுவிட்டு பணத்தை எடுத்துச் செல்லும் படி கூறுகிறான்.வேறு வழி இல்லாது செல்மா அவனது விருப்பத்தின் பேரில் அவனைக் கொல்கிறாள்.பிறகு பணத்தை தன் மகனுக்கான அறுவை சிகிச்சை தொகையாக மருத்துவமனையில் கட்டுகிறாள்.வழக்கு நீதி மன்றம் வருகிறது.ஏன் கொலை செய்தாய் என்ற கேள்விக்கு அதை கூற முடியாது.சத்யம் செய்து கொண்டுள்ளோம் என அவள் கூறும் பதில் அவளுக்கு மரண தண்டனை வழங்குகிறது.மரண தண்டனை விதிக்கப் படும் நேரத்திலும் பகற்கனவு கானும் அவளது கள்ளமற்ற பாத்திரம் நம்மை தீராத ஒரு கழிவிரக்கத்திற்குள் தள்ளுகிறது.
படத்தில் இடம் பெறும் பாடல்கள் கனவு காட்சிகள் கதையை ஒட்டி அமைக்கப் பட்டுள்ளன.கனவுகள் தரும் ஆசுவாசமும் அது முடியும் வேலையில் ஏற்படும் நிகழ் குறித்த துக்கமும் ஒருங்கே நம்மை சாய்க்கிறது.
செல்மாவாக நடித்திருக்கும் Bjork நடித்திருக்கிறாரா அல்லது அவரது இயல்பே அது தானா என்பது போல் இருக்கிறது.சிறிய கண் அசைவில் அலட்டிக் கொள்ளாது கண்களில் நீர் வர வைக்கிறார்.2000-ல் வெளியாகி ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட இப்படம் Lors von Trier என்பவரால் இயக்கப்பட்டுள்ளது.இறுதி காட்சிகள் நம்மை நிசப்தத்திற்குள் வீசியெறிந்து விடுகின்றன.மறக்கவியல்லாத படம்.

Sunday, August 10, 2008

வித்தை காட்டுபனின் கனவு...

இப்படியாக
அந்த பாடலை பாடத் தொடங்கிய
சர்க்கஸ் கோமாளியொருவன்
சட்டென ஒருநாள்
தன் அரிதாரங்களை கலைத்துவிட்டு
ஆடைகளையும் அவிழ்த்து போட்டுவிட்டான்...

இப்படியாக
ஊஞ்சல் தாவிய
பறக்கும் பாவையொறுத்தி
தன் இணைப்பாவையை
கீழே வீழ்த்தி
மாயமாய் வானமேகிவிட்டாள்...

இப்படியாகவே
சைக்கிள் ஓட்டிய
அந்த சர்க்கஸ் புலியும்
ரிங் மாஸ்டரின்
செவிட்டில் அறைந்துவிட்டு
கானகத்திற்குள் புகுந்துவிட்டது....

Friday, August 8, 2008

கவிதை குறித்த மழையொன்று...

நேற்றிரவு மழைபொழிந்த தாழங்காட்டில்
நட்சத்திரங்கள்
சேகரிப்போம் வாவென்கிறாய்...

பசிய இலையூறும் கூட்டுப்புழுக்களின்
றெக்கை நிறங்குறித்து கனவு பொறுத்தி
நகரும் நத்தையோடுகளில்
கால் பாவாது
முட்புதர்கள் தாண்டுகிறாய்
மின்னல்களை கசியவிட்டு...

திவலைகள் துளிர்த்திருக்கும்
சிலந்தி வலை இடைவெளியின்
வெர்னியர் துல்லியத்தில்
அதிசயிக்கிறாய்
வெகுதூரத்து கிளையொன்றில்
கு கூவெனும்
உன்னினத்திற்கு செவியிருத்தபடி...

நிரம்பி சுரக்கும்
குறுஞ்சுனையின் கெண்டையென
பின்னோடுகிறேன் நானும்
தாகத்திற்கு கொஞ்சம்
வெயிலருந்தியவனாய்...