
எவ்வளவு நேரம்
உன் உள்ளங்கைக்குள்
மூடி வைப்பாய்
விட்டு விடு
சுடர்
இரவை அருந்தட்டும்
சுடரை
இரவு அருந்தட்டும்
நீ
யார் சொல்ல கூடும்
மீண்டும் ஒரு இரவு வருமென்று
அந்த மெழுகை அணைத்து விடு
நான்...

முடிவிலியில் மிதக்கும் குருவிகளை போல் இல்லையே வாழ்வு என அடிக்கடி எண்ணத் தோன்றும்.குஞ்சு பொறிக்க மட்டுமே கூடு சமைக்கின்றன அவை.ஒரு பொந்துக்குள் சுருங்கி, சதா வருத்தும் வீடு குறித்த நினைவேக்கங்களோடு,வறண்ட இப்பாலை பரப்பில் தனக்கே அந்நியனாக உலவும் இந்நாட்கள் இழந்தவை குறித்த கழிவிரக்கங்களை தருவதாக இருக்கின்றன.வீடு என்பது வெறும் மணல் மற்றும் கற்களால் மட்டுமே ஆனதா என்ன? .தேவைகளின் பொருட்டு வீட்டை துறப்பவன்/ள் நத்தையை போல் சதா சுமந்து திரிகிறான்/ள் சொந்த வீட்டின் நினைவுகளை.எப்பொழுதும் தூரங்களின் மீதான கவர்ச்சியும்,அருகாமையின் மீதான அலட்சியங்களுமாக கழிந்த பொழுதுகள் குற்ற உணர்வுகளை தூண்டுகிறது.தனிமையின் நெறிப்புகளிலிருந்து திரைப்படங்களும் புத்தகங்களும் மட்டுமே சற்று ஆசுவாசம் அளிக்கின்றன.வெகு நாட்களாக கைவசமிருந்தும் பார்த்திராத House of sand and Fog நேற்றைய இரவின் மீது நீண்ட வெறுமையை போர்த்தியது.வீட்டின் புகைப்படத்தை தேடி எடுத்து வெகுநேரம் பார்த்து கொண்டிருந்தேன்.
யாக வாசிக்க தொடங்கிய வைக்கம் முகம்மது பஷீரின் 'மதில்கள்' அற்புதமான வாசிப்பனுபவமாக இருந்தது.யாரோ போல் நாட்களை கடத்த பழக வேண்டும் இனி.நல்ல திரைப்படமோ,புத்தகமோ உள்ளேறி நிகழ்த்தும் ரசவாதம் எப்பொழுதும் உறக்கமின்மையிலும் பிறழ்வு நிலையிலுமாக முடிகின்றது.மனம் தான் எவ்வளவு விசித்திரமானது.எப்பொழுதும் சூழல் குறித்த புகார்களை முனுமுனுத்தபடி கச்சிதமாக அதில் பொருந்தவும் பழகி கொள்கிறது.கதையில் நீண்ட மதிலொன்றால் ஆண்களுக்கும் பெண்களுக்குமாக பிரிக்கப்பட்ட சிறைக்குள் பூக்கும் இரு கைதிகளின் காதல் அழகாக விவரிக்கப்பட்டிருந்தது.முகமறியாத அந்த காதலியை பார்க்க இருக்கும் நாளில் அவன் விடுவிக்கப்படும் பொழுது ஆற்றாமையோடு கேட்பான் 'யாருக்கு வேண்டும் இந்த சுதந்திரம்'?.The Shashank Redemption திரைப்படத்தில் வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்து மூப்பெய்திய காலத்தில் விடுவிக்கப்படும் ஒரு வயோதிகர் வெளியேறி வெளி உலகில் தொடர்பு கொள்ள முடியாமல் ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொள்வார்.மதிலுகளில் ஓரிடத்தில் நாயகன் கூறுவான் இது சின்ன சிறை.இதற்கு வெளியே பெரிய சிறை இருக்கிறதென.சற்று முன் உணவருந்தி கொண்டிருந்த பொழுது ஒரு மலையாளி நண்பன் ராஜீவ் கொலை-சதி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நளினி குறித்து கேட்டு கொண்டிருந்தான்.நீண்ட பத்தொன்பது வருடங்கள்.அவர் குழந்தை என்னவாயிற்று.இனி விடுதலை என்பது என்ன விதமாக பொருள் படும் அவருக்கு.என்ன விதமான காட்டுமிராண்டி சமூகம் இது.
