Saturday, March 20, 2010

ரெஜியின் பூனை...


புசுபுசுவென வெள்ளை நிறத்தில் சோகமாக உலவும் அந்த பூனையை, இதற்கு முன் இங்கு பார்த்ததில்லை.எங்கிருந்தது இது.எப்படி வந்தது இங்கு.யாருக்கும் தெரியவில்லை.இந்த விடுதியை சுற்றி நிறைய பூனைகள் இருக்கின்றன.பூனைகளிடம் உள்ள நல்ல குணம் நாய்களை போல் அவை ஒரு புதிய நபரிடம் சட்டென விரோதம் கொள்வதில்லை.எனினும் சக பூனைகளோடு இந்த புசுபுசு நட்பு கொள்ளவில்லை.பிற பூனைகளை போல் விடுதியாளர்கள் வீசும் மீத உணவுகளுக்கு போட்டியிடுவதில்லை.ஒரு கௌரவமான மனிதரால் வளர்க்கப்பட்ட பூனையாக இருக்க வேண்டுமென எண்ணி கொண்டேன்.எனக்கு பூனைகளை பிடிக்காது.எனினும் இப்பூனை என்னை போலவே தனித்து விடப்பட்டிருப்பதாக தோன்றியது.பூனைகளின் உலகம் கேலி செய்யப்படுகிறது.பூனைகளை சுலபமாக புரிந்து கொள்ள முடிவதில்லை.புரிந்து கொள்ள முடியாதவை எப்பொழுதும் கேலிக்குள்ளாகின்றன.அல்லது கடுமையாக ஒதுக்கப்படுகின்றன.

நேற்றிரவு பெய்த மழையில் தொப்பலாக நனைந்து விட்டது புசுபுசு.குளிரில் வெடவெடத்து ஒண்ட இடமின்றி என் அறைவாசலில் படுத்து கிடந்தது.அதன் கண்கள் பசியில் மிகவும் சோர்ந்திருந்தது.மிருதுவான நனைந்த அதன் ரோமங்களை வாஞ்சையோடு வருடி விட முனைந்தேன்.சட்டென தலை தூக்கி தொடாதே என்றது.பூனைகளின் சுபாவம் அது.அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.நாய்களை போல் பூனைகளை சில ரொட்டி துண்டங்களால் வசியம் செய்து விட முடியாது.பூனைகள் தம் உலகத்திற்குள் வேறொருவரை எளிதில் அனுமதிப்பதில்லை.கைகளை இழுத்து கொண்டேன்.அறையிலிருந்த கொஞ்சம் பிஸ்கெட்டுகளை எடுத்து வந்து கொடுத்ததும் அமைதியாக வாங்கி கொண்டது.கடுமையான பசியிலும் நளினமாகவே உண்ணும் புசுபுசுவை பார்க்க பரிதாபமாக இருந்தது.ஒரு புதிய நபரிடம் சட்டென உரையாடலை தொடங்குவதில் உள்ள அபத்தங்களில் மௌனமாக இருந்தேன்.மேலும் பூனைகளின் மொழி உரையாடலுக்கு ஏற்றதல்ல.அவை குறிப்புகளாலும் நிமித்தங்களாலும் பேசுகின்றன.பூனைகளின் மொழி கவிதையால் ஆனது

விரும்பினால் என் அறையில் இன்றிரவு ஓய்வெடுத்து கொள் எனக் கூறி உள்ளே சென்று விட்டேன்.மிகுந்த தயக்கங்களுக்கு பின் அது என் அறை வந்தது.என் சுழல் நாற்காலியில் ஏறி அமர்ந்து கொண்டது.கேள்விகளால் வழியும் என் பார்வையை தவிர்த்து மூலையில் கிடந்த கிதாரை ஏக்கமாக பார்க்க தொடங்கியது.வெளியே மழை அடர்ந்து கொண்டேயிருந்தது.கண்ணாடி சன்னலில் மின்னல் கோடுகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன.மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அறைக்குள் ஒரு மெழுகு மட்டுமே ஒளிர்ந்து கொண்டிருந்தது.கிதாரை எடுத்து மீட்ட தொடங்கினேன்.'என் இனிய பொன் நிலாவே' என மெலிதாக பாடியபடி வாசித்து கொண்டிருந்தேன்.அறையின் கூரை மேல் சடசடத்த மழையொலியின் தாளம் விவரிக்க இயலாத கிளர்வுகளை தந்தது. 'பன்னீரை தூவும் மழை' என நான் உருகி கொண்டிருந்தேன்.அருந்தியிருந்த மதுவும் மழைக்குளிரும் ஒரு வித மயக்க நிலையை தந்துவிட்டிருந்தது.புசுபுசுவும் இப்பாடலில் தன் வசமிழந்திருக்க வேண்டும்.அதன் மெல்லிய விசும்பலே என் நினைவை மீட்டது.கிதாரை மூலையில் சாய்த்து விட்டு புசுபுசுவையே பார்த்து கொண்டிருந்தேன்.மன ஓட்டங்களை வாசிக்க தெரிந்திருக்கிறது புசுபுசு.கண்களை துடைத்தபடி,ரெஜி நன்றாக பாடுவான்.அவன் பியானோ வாசித்தால் நாளெல்லாம் கேட்கலாம் என தொடங்கியது.நான் கோப்பையிலிருந்த மீத மதுவை அருந்தியபடி கட்டிலில் சரிந்து கேட்க ஆரம்பித்தேன்.

புசுபுசு எனக்கு மிருதுவை நினைவு படுத்தியது.நான் மெல்ல மெல்ல ரெஜியாக மாறி கொண்டிருந்தேன்.மிருதுவை கிராமத்தில் உள்ள தாமரை குளத்தில் தான் முதலில் சந்தித்தேன்.என்னை போலவே இருண்ட குளக்கரை படிக்கட்டுகளில் தனித்திருந்தாள்.இரவில் நட்சத்திரங்கள் மிதக்கும் அக்குளத்தை நாங்கள் இமைக்காமல் பார்த்திருப்போம்.சொற்களின் பொருளின்மையை உணர்ந்திருந்தோம்.எங்கள் சம்பாஷனை புன்னகைகளால் ஆனது.நாங்கள் குளத்தில் மிதக்கும் நட்சத்திரங்களை விழுங்க முயன்று தோற்று போகும் மீன்களை ரசித்திருந்தோம்.மிருது சிலசமயம் தன்னை மறந்து பாடுவாள்.

நாடோடி நிலவே
எங்கே உன் கூடு
யாரை தேடி திரிகின்றாய்
அறிவாயோ நிலவே
அவன் பெரும் கள்வன்
நீயில்லா நேரம் வருகின்றான்...


நான்கு படித்துறைகளும் அவள் பாடலில் லயித்திருக்கும்.சத்தமெழுப்பாமல் நீர்க்கோழிகளும் தவளைகளும் கூடி ரசித்திருக்கும்.உய் உய் என சுழலும் காற்று அவள் கூந்தலையும் ஆடைகளையும் களைத்து விளையாடும்.ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்த அன்றைய இரவில்,அவள் படித்துறையில் அமர்ந்து விரல்களால் நீரை அலைந்தபடி இருந்தாள்.காயும் நிலவொளியில் எங்கிருந்தோ வந்த மீன் கொத்தி ஒன்று நின்ற இடத்தில் சிறகடித்து சட்டென இறங்கி ஒரு மீனை கவ்வி பறந்தது.அவள் என்னிடம் திரும்பி நீயும் அந்த மீன் கொத்தி தான் என்றாள்.நாங்கள் குளத்தில் இறங்கி நீந்த தொடங்கினோம்.நிலவொளியில் மலர்ந்திருந்த தாமரைகளை நோக்கி சென்றோம்.ஆழம் அதிகமிருந்த அக்குளத்துள் அவள் மீனை போல் நீந்தி கொண்டிருந்தாள்.கனநேரமே எனினும் அக்கனவு வந்து போனது.

ஒரு பறவையை போல் மிருதுவாய் என் கைகளில் ஏந்தி கண் மூடி காத்திருக்கும் அவளை பார்த்து கொண்டேயிருக்கிறேன்.மழையில் நனைந்த குருவி போல் வெடவெடத்து கொண்டிருக்கிறாள்.சிலிர்த்து சிலிர்த்து அடங்கும் அவள் பின் கழுத்து பூனை ரோமங்களை வருடியபடி மெல்ல அவள் காதில் கிசுகிசுக்கிறேன்.

'நீயொரு தொட்டாற்சினுங்கி'

மீண்டும் சினுங்க தொடங்கியவள் முஷ்டி மடக்கி வலிக்காமல் என் மார்பில் குத்துகிறாள். 'தொட்டாற்சினுங்கி உன்னை காதலிக்குமா? அது உனக்கு முத்தம் கொடுக்குமா ? சொல்லடா மானங்கெட்டவனே' என புரியாத ஒரு மொழியில் வசை பாடி துரத்துகிறாள்.அவளை மேலும் சீண்டி செந்தமிழில் வையடி என் மறத்தமிழச்சி என்றபடி வெற்றிலை காட்டுக்குள் ஓடுகிறேன்

கண்ணாமூச்சி ஆடி களைத்து நிற்பவளை பின்னால் வந்து கட்டியணைக்கிறேன்.பொய் கோபத்தில் என்னை உதறியபடி 'சீ..சீ வெட்கங்கெட்டவனே...சண்டாளா...கன்னியொருத்தி தன்னந்தனியே சிக்கி கொண்டால் அவளிடம் நீ காட்டும் கண்ணியம் இதுதானா.தொடாதே..தூரச்செல்' என என்னை கோபிக்கும் கணத்தில் உறைக்கிறது.ஏன் எல்லாம் கறுப்பு வெள்ளையாக தெரிகிறது எனக்கு.அவள் நின்ற இடத்திலிருந்து சர்ப்பம் ஒன்று நெளிந்து காற்றில் மறைகிறது.பச்சை கொடிகள் எல்லாம் சாம்பல் நிற சர்ப்பங்களாக நெளிகின்றன.வெற்றிலை கொடிகள்,மண்,மேகம்,வானம் எதிலும் நிறமில்லை.கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்கிறேன்.இப்பொழுது மிதந்து அசையும் இரு கறுப்பு வெள்ளை உதடுகளை தவிர வேறு உருவங்களே புலப்படவில்லை.யாவும் சாம்பல் மயம்.நிறக்குருடா? இல்லை முழுக்குருடா? என்னை என்னால் காண முடியவில்லை.அவசரமாக உடலை தடவிப்பார்த்து கொள்கிறேன்.இருக்கிறது.புலப்படவில்லை.

சாம்பல் வெளியில் மிதக்கும் இரு கறுப்பு வெள்ளை உதடுகள்.உதடுகளே இப்பொழுது என் திசைமானி.இவ்வுதடுகளும் மறைந்து விடுமுன் இங்கிருந்து வெளியேறி விட வேண்டும்.இது சாம்பல் காடு.மரண குழி.நான் அவள் உதடுகளை நெருங்குகிறேன்.மெல்ல புன்னகைத்து போக்கு காட்டி மிதந்தோடும் உதடுகளை வெறி கொண்டவனாய் துரத்த தொடங்குகிறேன்.சாம்பல் குவியலுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் மூச்சு திணறலோடு புலப்படாத கொடி மரங்களில் மோதி உருண்டெழுந்து வண்ணத்து பூச்சியாய் பறந்தோடும் உதடுகளின் பின்னே நான்...

சட்டென விழித்து கொண்டேன்.இல்லை.இது தாமரை குளம்.இதோ என்னருகே நீந்துகிறாள் மிருதுளா.மிருது..மிருது..அவளை தாவி அணைத்தேன்.சினுங்கியபடி என்னை தள்ளி விடுகிறாள்.இதோ தாமரையின் நிறத்தில் அதே கறுப்பு வெள்ளை உதடுகள்.மூர்க்கம்.மகா மூர்க்கம்.அவளை கொடியென பற்றி படர்ந்தேன்.நாங்கள் சூன்ய வெளியின் ஒரு பின்னமானோம்.நீர் சர்ப்பம் கூடும் நெடுங்கடல் வெளியானது அப்பெருங்குளம்.சுயம் மனம் கர்வம் சர்வ நாசம்.துவண்டு இறுகும் தாவரமானோம்.எங்கோ மிதந்த மேகங்கள் திரண்டு பொழி பொழியென தொடங்கியது பேய் மழை.ஒரு கணம் வெளியே சிதறும் சிறு அலை.அது ஒருபோதும் குளமில்லை.தாமரை கொடிகள் எங்களை பிண்ண தொடங்கியது.நாங்கள் அக்குளத்தின் ஒரே மீனானோம்.மெல்ல ஒரு மீளா வெளிக்குள் மூழ்கி போனோம்.


சுழல் நாற்காலியில் சோர்ந்து அமர்ந்திருக்கும் புசுபுசுவை மெல்ல வருடி கொடுத்தேன்.புசுபுசுவுக்கு ரெஜி இல்லாத உலகம் எவ்வளவு பொருளற்றது.மழையில் நின்று நனையத் தொடங்கினேன்.



நன்றி : மார்ச்-2010 அகநாழிகை.

Friday, March 19, 2010

சில பயணங்கள்...சில அனுபவங்கள்...

பள்ளி நாட்களிலிருந்தே பயணங்களின் மீது ஒவ்வாமை தான்.தவிர்க்க முடியாத சூழல் தவிர எங்கு செல்வதானாலும் என் இரு சக்கர வாகனத்தில் தான் செல்வது.பத்தாம் வகுப்பு வரை ஹெர்குலிஸ் சைக்கிள்(அதற்கு டாடா குஜிலி என பெயர் வைத்திருந்தேன்).பிறகு ஒரு டி.வி.எஸ் சேம்ப்.கல்லூரி நாட்களில் ஹோண்டா பேஷன்.வேலையில் சேர்ந்த பிறகு வட மாநிலங்களுக்கு அடிக்கடி செல்ல நேர்ந்ததால் இந்த ஒன் மேன் ஆர்மியிலிருந்து சோசலிஸ சிறைக்குள் மீண்டும் சிக்க வேண்டியதாகி விட்டது.

உலகிலேயே மனித உடலை துச்சமாக மதிக்கும் ஒரே தேசம் நம் தேசமாக தான் இருக்குமோ என நினைக்கும் அளவுக்கு தான் இருக்கிறது நம் போக்குவரத்து துறைகளும் சாலைகளும்.பேரூந்து என்றால் முழங்கால் இடிக்கும் இருக்கை.(கதிர் போன்ற ஆறடி ஆஜானுபாகுக்களுக்கு இந்த அவஸ்தை புரியும்).போதாக்குறைக்கு மூன்று பேர் அமரும் சீட்டில் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று நான்கு பேராக பிதுக்கி கொண்டு அமர்வது.பக்கத்தில் அமர்ந்திருப்பவன் குறித்த எந்த லஜ்ஜையுமின்றி எட்டி எட்டி ஜன்னல் வழியாக பான்பராக்,வெற்றிலை என்று குதப்பி துப்புவது.இதைவிட கொடுமை இடித்து கொண்டு நிற்கும் சாக்கில் இடுக்கில் கைவிட்டு சல்லாபம் செய்வது.

இதில் பெண்களை நோண்டுவது ஒரு வகையினர் என்றால் ஆண்களை நோண்டுபவர்களும் இருக்கிறார்கள்.வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு வாகனங்களில் இப்படி வதை பட்டதுண்டு.ஒருமுறை சோலாப்பூரிலிருந்து பரலி செல்லும் வழியில் எசகு பிசகாக இப்படி ஒருத்தன் அருகில் அமர்ந்து விட்டான்.அதுவோ 200 கிலோமீட்டர் தூர பயணம்.அடிக்கடி பேரூந்துகள் கிடையாது அந்த ஊருக்கு.இரவு வேறு.ரொம்ப நல்லவனாக பேசி கொண்டு வந்தவன் தூங்க ஆரம்பித்த பிறகு நோண்ட ஆரம்பித்து விட்டான்.அடுத்தவனுக்கு கர சேவை செய்து விடுவதில் அப்படி என்ன ஆனந்தமோ இவர்களுக்கு.அழாத குறையாக உனக்கு என்ன தாண்டா வேனும் என்றேன்.போர் அடிக்குதே என்றான்.பாவிப்பயல்.


பஸ்ஸில் இப்படியான லோலாயி என்றால் ரயில் பயணங்கள் இன்னும் விஷேசமானவை.முதல் காதல் முதல் முத்தம் போல முதல் பயணங்களும் சுவாரஸ்யமானவை தான்.முதன் முதலாக சென்ற நீண்ட தூர ரயில் பயணம் சென்னையிலிருந்து கோரமண்டலில் ஒரிஸா சென்றது தான்.கட்டக் ஸ்டேஷனுக்கு எத்தனை மணிக்கு ரயில் செல்லும் என தெரியவில்லை.கம்பார்ட்மெண்டிலிருந்த ஒரு தமிழரோடு பேசிய படி வந்தேன்.அவருக்கும் கட்டக் எப்பொழுது வரும் என்று தெரியவில்லை.ஒரு ஒரிஸா இளைஞன் எங்களை பார்ப்பதும் புத்தகம் படிப்பதுமாக இருந்தான்.பேசிக் கொண்டு வந்த நண்பர் வடநாட்டான்களை ஏதேதோ காரணங்களுக்கு ஏகத்துக்கும் விளாசி கொண்டு வந்தார்.அந்த இளைஞன் வேறு எங்களை அடிக்கடி திரும்பி பார்த்ததால் இவனுக்கு என்ன வேனும்னு தெர்லயே.நாதாறிப்பய நம்மளயே பாக்குறேனே என வேறு சாடை சொன்னார்.பிறகு வழியிலேயே இறங்கி விட்டார்.அவர் இறங்கிய பிறகு அழகாக தமிழில் பேச தொடங்கினான் அவன்.அசந்து விட்டேன்.அவனும் கட்டக்கில் தான் இறங்கினான்.சென்னையில் மென்பொருள் துறையில் இரண்டு வருடங்களாக பணி செய்வதாக கூறினான்.பொறுமையாக ரயில் நிலையம் விட்டு வந்து நான் செல்ல வேண்டிய ஊரின் பேரூந்தை காட்டி விட்டு தான் சென்றான்.அப்பொழுது ஹிந்தி எழுதவோ பேசவோ தெரியாது.


ஹிந்தி தெரியாமல் தனியே வட மாநிலங்களில் பயணம் செய்வது ஒரு அலாதியான அனுபவம்.ஊர் பெயர் ஆங்கிலத்தில் இருக்காது.படித்தும் பட்டிக்காட்டானாக இந்த பஸ் எங்க போவுது எனக்கேட்க கொடுமைகாயக இருக்கும்.சிரித்து கொண்டே மூச்சுக்கு முன்னூறு தரம் சாலா மதராஸி என்று திட்டுவார்கள்.எல்லாம் தார் பூசி அழித்த புரட்சியின் பலன்.பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கமென பணி நிமித்தம் அங்கே அலைய நேரும் பொழுதுதான் எல்லாம் புரியும்.ரயிலில் வசதியாக முதல் வகுப்பில் பயணிப்பதில் சிக்கல்கள் இருப்பதில்லை.இரண்டாம் வகுப்பு கழிவறைகளில் மலம் கழிப்பது போன்ற துர்பாக்கியம் வேறொன்றுமில்லை.தண்ணீர் ஊற்றி கழுவ டப்பா ஒன்றும் இருக்காது.அடிக்கடி பயணம் செய்பவர்கள் தெளிவாக சோப்பு சீப்பு டப்பா சகிதம் வந்து விடுவார்கள்.எனது முதல் பயணத்தில் இந்த டப்பா இல்லாத பிரச்சினையால் கக்கூஸ் போகக் கூடாதென ஒரு நாள் முழுக்க ஒன்றும் சாப்பிடாமல் தண்ணீரையும் தேனீரையும் மட்டுமே குடித்து பயணித்தேன்.பிறகான நாட்களில் முதல்வேளையாக இரண்டு லிட்டர் பாட்டில் ஒன்று வாங்கி கொள்வது.மறக்காமல் பர்ஸில் ஒரு பிளேடு வைத்து கொள்வது.விடிந்ததோ இல்லையோ பாட்டிலை இரண்டாக அறுத்து டப்பாவாக்கி விடுவது.இப்படி எப்பொழுதும் பிளேடோடு மிக இயல்பாக பயணித்த நாட்கள் இப்பொழுது சிரிப்பை வரவழைக்கிறது.


குளிரூட்டப்பட்ட வாகனங்களில் நெடுந்தூரம் செல்வதென்றாலே எனக்கு அடிவயிறு கலக்கும்.அடிக்கடி மூத்திரம் வரும்.அராஜகமாக எங்கேயும் நிறுத்தாமல் வேறு போய் கொண்டிருப்பார்கள்.அப்படியே நிறுத்தினாலும் இன்னொரு தொந்தரவு எனக்கு.சுற்றிலும் கூட்டமாக ஆட்கள் இருந்தால் சிறுநீர் சொட்டு கூட வராது(எனக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட விசித்திர பிரச்சினைகளெல்லாம் வருகிறதா என்ற சந்தேகத்தை கதிர் சமீபத்தில் தான் தீர்த்து வைத்தார்).எவ்வளவு முக்கினாலும் இரக்கமேயில்லாமல் 'ம்ஹீம் வரமாட்டேன் போ' என அழிச்சாட்டியம் செய்யும்.சினிமா கொட்டாய்,பொது/பேரூந்து கழிப்பிடம் இங்கேயெல்லாம் படாத பாடு தான்.நமக்கே இப்படியென்றால் இந்த பெண்கள் பாடெல்லாம் எப்படியோ எனத் தோன்றும்.ஆனாலும் உலகிலேயே சகிப்பு தன்மை அதிகம் உள்ளவர்கள் நம் மக்கள் தான் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.காரணம் வகை தொகையில்லாமல் கோயில்களில் கூடும் கூட்டம் தான்.பொறுமை சகிப்பு தன்மை போன்ற வஸ்துக்களை வளர்த்து கொள்ளவாவது வாழ்வில் ஒரு முறை திருப்பதி சென்று வர வேண்டும் என நண்பர்களிடம் கூறுவேன்.குடும்பத்தோடு திருப்பதிக்கு பயணம் செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் மாரியாத்தாளுக்கு தீமிதிக்க வேண்டும் என்ற ஆப்ஷன் வந்தால் தயங்காமல் இரண்டாவதையே தேர்வு செய்வேன்.அவ்வளவு கொடுமையாக இருந்தது அந்த பயணம்.மாட்டை பட்டியில் அடைப்பது போல் ஒரு இரவு முழுக்க கூண்டில் அடைத்து இம்சை செய்தார்கள்.பிறகு தான் பைசா கொடுத்து பெருமாளை சட்டுனா ஷேவிக்கும் டெக்னிக்கெல்லாம் நண்பர்கள் கூறினார்கள்.போங்கடா நீங்களும் உங்க பெருமாளும் என அத்தோடு முழுக்கு போட்டு விட்டேன் கோயில்களுக்கு.


மிகவும் சராசரி மனிதர்களான நமக்கே பயணங்களில் இவ்வளவு தொந்தரவு.திருநங்கைகளை பற்றி யோசித்திருக்கிறோமா? சௌதி கிளம்ப இரண்டு நாட்களுக்கு முன்னர் கதிர் தொலைபேசினார்.விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் திருநங்கைகளின் தாலி அறுக்கும் சடங்கு நடக்கப்போகிறதென்று.என் நண்பன் தஷ்னாவை அழைத்து கொண்டு பைக்கில் கிளம்பி விட்டேன்.கூவாகத்தில் கதிர் எங்களுக்காக காத்திருந்தார்.
கூவாகம் ஒரு சின்ன கிராமம்.இங்கே இருக்கும் ஒரு சிறிய கோவிலில் தான் இந்த சடங்கு வருடந்தோறும் நிகழ்கிறது.தெம்பாக முட்ட முட்ட குடித்து விட்டு உள்ளே நுழைந்தால் போதையெல்லாம் தெளிந்து விட்டது.இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்து கூடியிருந்த திருநங்கைகளின் எண்ணிக்கை மலைப்பை ஏற்படுத்தியது.

திருநங்கைகள் நம்மிடம் பரிதாபத்தை எதிர்பார்க்கவில்லை(எளியவர்களின் மீதான பரிதாபமும் ஒருவகையில் வன்முறையே என நினைக்கிறேன்)அங்கீகாரத்தை கூடயில்லை.உரிமைகளை மட்டுமே.வாழ்வதற்கான அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகிறது என்பதை அங்கே சென்ற பொழுது முழுமையாக உணர முடிந்தது.நாங்களும் மனுஷங்க தாண்டா என்ற குமுறலை வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.ஜே ஜே என்று எங்கெங்கும் கூட்டம்.வயல்வெளிகள் சூழ்ந்த அக்கிராமத்தில் முளைத்திருந்த குட்டி குட்டி பனியார கடைகள்.தள்ளு வண்டிகள்.நான் பார்த்து பிரமித்த ஒரே திருவிழா அது தான்.ஆங்காங்கே அழகி போட்டிகள்.ரெக்கார்ட் டேன்ஸ் என களை கட்டியிருந்தது.விடிய விடிய சாரி சாரியாக மக்கள் வருவதும் போவதும்.நேர்த்தி கடனுக்கு தாலி கட்டி கொள்ள வரும் சராசரி கிராம குடியானவர்களுமென அற்புதமான நிகழ்வு அது.அங்கேயும் குறியை கையில் பிடித்தபடி உராய்வுக்கு அலையும் கிழங்கள் சில்வாண்டுகள் இல்லாமல் இல்லை.திருநங்கைகளை சீண்டுவது.ஊசிகளால் குத்துவது என மன வியாதியஸ்தர்கள் இல்லாமல் இல்லை.அலைந்து அலைந்து ஓய்ந்து போய் நானும் கதிரும் நண்பர்களும் ஒரு மூலையில் அமர்ந்திருந்தோம்.எங்கிருந்தோ ஒரு திருநங்கை சரக்கு பாட்டிலோடு ஓடி வந்து எங்களை விரட்டினார்.கதிர் தான் என்ன ஏதென்று விசாரித்தார்.ஆங்காரமும்,அழுகையுமான குரலில் ''நாங்க ஏதோ விதிய நொந்து வரோம்,எங்கள ஏண்டா இம்சை பண்றீங்க,ஊசியால குத்துறீங்க,எங்களுக்கென்ன எரும தோலா,வலிக்குதுல்ல..உங்க அக்கா தங்கச்சிங்களுக்கு இப்படி ஆயிருந்தா தாண்டா தெரியும் என பொத்தாம் பொதுவாக வெடித்து விட்டு போனார்.கொஞ்ச நேரம் மயான அமைதி நிலவியது எங்களிடையே.

பயணங்கள் சுவாரஸ்யமானவை.ஒவ்வொரு தெருமுனை சிறு கல்லும் சொல்ல காத்திருக்கிறது.தன் மீது இளைப்பாறிப்போன குருவிகளைப்பற்றியதான ஓராயிரம் கதைகளை.






Friday, February 26, 2010

Baraka - ஓர் அற்புத ஆவணம்.



Ron Fricke இயக்கிய இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்த பொழுது வாழ்வு ஒரு சுத்தமான பரிசு என்ற ஓஷோவின் சொற்கள் தான் நினைவிற்கு வந்தது.ஒரு துறவியென தியானம் கொண்டிருக்கும் இமயமலை சாரலும் அவ்வெளியில் மிதக்கும் பறவையும், அகவெளியினை மயில் தூவியென வருடும் Michel stearns ன் உன்னதமான பிண்ணனி இசையுமாக விரியும் இப்படம் ஒரு அரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம்.இப்படத்தை பெரிய திரையில் பார்த்தவர்கள் பாக்கியவான்கள்.

Baraka என்ற சூஃபி சொல்லுக்கு ஆசிர்வாதம் என பொருள் கொள்ளலாம்.விளக்கங்களோ,காட்சிபடுத்தப்பட்ட பிரதேசங்கள் குறித்த குறிப்புகளோ கூட இல்லாமல் நாடோடி போல் அலைந்து திரியும் இப்படத்தின் திரைக்கண்கள் ஓரங்குலமும் நகராமல் ஓர் உன்னத ஆன்மீக யாத்திரையை உள்ளே நிகழ்த்திவிட்டதான அனுபவத்தையே தருகிறது.மாபெரும் படைப்புகள் மௌனங்களால் செய்யப்பட்டவையாகவே இருக்க வேண்டும்.அவை நமக்கு தரும் மேலான பரிசுகளும் இந்த மௌனத்தையே.

பனிப்புகை சூழ விரியும் ஜப்பானிய பனிமலை பிரதேச ஏரியொன்றில் அமிழ்ந்தபடி தியானிக்கும் குரங்கும்,அந்தகார நட்சந்திரங்களுமாக திரையில் விரியத்தொடங்குகிறது கனவு வெளி.மெல்ல நேபாளத்தின் காட்மண்டுவில் உள்ள தர்பார் ஸ்கொயரின் புராதண நகருக்குள் நுழைந்து பழைய கோயில்கள் ஸ்தூபிகள் என காட்சி படுத்தி நகர்கிறது.நேபாளம் பெரும்பாண்மை ஹிந்து மத நெறியாள்கைக்கு உட்பட்டது என செய்தியாகவே அறிந்திருக்கிறோம்.படத்தில் பார்க்கும் பொழுது குறைந்தது அருகில் இருக்கும் இந்த நாட்டிற்காவது சென்று வந்திருக்கலாமே என்றே எண்ண தோன்றியது.காட்சிபடுத்தப்பட்டிருக்கும் கோயில்களும் அந்நகரின் எளிய மக்களும் மிகவும் வசீகரிக்கின்றனர்.எவ்வித தொடர்புமின்றி சட்டென திபெத்திய புத்த விகாரைக்குள் நுழைந்து பிக்குகளும் அவர்களது சடங்குகளுமான நிலவெளிக்கு அழைத்து செல்கிறது கேமரா.

புனித நூலை வாசிக்கும் ஒரு ஹிந்து சாதுவின் சமஸ்கிருத எழுத்துக்கள் ஹீப்ரு மொழியாகி இஸ்ரேலின் பாதிரி கைகளுக்குள் அமிழ்ந்து பின் ஜெருசலத்தில் உள்ள யூத வழி பாட்டில் என கிளை மாறி கொண்டேயிருக்கிறது படத்தொகுப்பு.சூஃபிக்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்றான சுழல் நடனம் ஆடும் துருக்கி டெர்விஷ்கள்,இந்த நடனத்தை கற்று மேலை நாடுகளுக்கு அறிமுகம் செய்தவர் என குருட்ஜீஃபை சொல்ல வேண்டும்.ஜெருசலத்தில் உள்ள மாபெரும் கிறிஸ்தவாலயம்,திபெத்திய மடாலயமொன்றில் தீபங்களேற்றி தியானிக்கும் பிக்கு என மாறியபடி நகரும் காட்சிகள் உலகின் வெவ்வேறு நிலவெளிகளில் தோன்றிய புனித நூல்கள் மதங்கள் சடங்குகள் வழிபாட்டு முறைகள் என பரிணமித்திருக்கும் மனித வாழ்வின் நோக்கம் தான் என்ன என்ற கேள்வியை வழியெங்கும் இரைத்தபடியே நகர்கிறது.

இயற்கை வளம் நிறைந்த இந்தோனேஷிய மலைப்பிரதேசங்களும்,நெல்வயல்களும் ஒரு கணம் ப.சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி' நாவலை நினைவு படுத்தியது.கம்போடியாவின் அங்கோர் வாட்டில் இரண்டாம் சூர்யவர்மனால் 12ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட மிக பிரமாண்டமான கோயில் பிரமிக்க வைக்கிறது.இந்தோனேஷிய பாலி தீவில் உள்ள மக்களால் நிகழ்த்தப்படும் Kecak எனப்படும் ஒருவகை குரங்கு நடனம் சிலிர்க்க வைக்கிறது.ராமாயண காதையின் வானரர்கள் ராமனுக்கு உதவிய நிகழ்வின் வெளிப்பாடு என கூறப்படும் இந்நடனம் அல்லது வழிபாடு மிகவும் விசித்திரமாக இருக்கிறது.ஆண்களின் கூட்டம் ஒரு காதில் பூ சகிதம் கூட்டமாக அமர்ந்து வினோத ஒலிகளையும் உடல் மொழியையும் வெளிபடுத்துகின்றனர்.இந்தோனேஷியா,தாய்லாந்து என ராமாயணம் பல நாம ரூபங்களில் பல நாடுகளில் உலவுகிறது என ஜமாலன் சார் ஒருமுறை கூறியது நினைவு வருகிறது.

கம்போடிய புத்த விகாரகைகள்,பிக்குகள்,வெடித்து ஆறாத அந்நிலவெளியின் எரிமலை,ஆஸ்த்ரேலிய பழங்குடியினரின் விநோத நடனம் மற்றும் வழிபாடு என மாறி மாறி வியப்பிலாழ்த்தியபடி பயணம் செய்கிறது படம். பிரேசிலின் அமேசான் காட்டு பழங்குடியினர்,ஆஸ்த்ரேலிய குகை மனிதர்களின் சுவரோவியங்கள் மற்றும் அபோரிஜின் பழங்குடியினர்,காயோபா பழங்குடியினர் என எளிதில் காண கிடைக்காத பழங்குடியினரின் காட்சிபதிவுகளின் தொகுப்பாக உள்ளது இப்படம்.

எங்கோ இந்தோனேஷிய தொழிற்சாலையில் சிகரெட்டிற்கு புகையிலை சுருட்டும் பெண்கள் அடுத்த காட்சியில் ஜப்பானின் ஏதோ ஒரு நெரிசலான பேரூந்து நிலையத்தில் நின்று புகைத்து கொண்டிருக்கும் ஒரு ஜப்பானியன் என படத்தொகுப்பில் குறுங்கவிதைகளும் முயன்றுள்ளனர்.கம்போடிய சித்ரவதை கூடங்கள்,சித்ரவதை முகாமில் இருந்தோரின் புகைப்படங்கள்,ஜப்பானிய குண்டு வீச்சின் பாதிப்புகளை மௌனமாக நடித்து காட்டும் Butob கலைஞர்,ஆயுதம் ஏந்தி நிற்கும் காவலர்கள்,சித்ரவதை முகாமில் குவிந்து கிடக்கும் மண்டையோடுகள்,எங்கோ ஒரு நகரத்தில் சாலையில் செல்பவனை அழைக்கும் ஒரு பாலியல் தொழிலாளி,கல்கத்தாவின் குப்பை பொறுக்கும் விளிம்புநிலை மனிதர்கள்,பிளாட்பார பிரஜைகள் என மானுட துயரையும் காட்சி படுத்தியபடி விரியும் விவரணைகள் நம்மை நிசப்தமாக்குகின்றன.மத்திய கிழக்கு நாடுகள் குறிப்பாக அதீத கட்டுப்பாடுகள் நிறைந்த சௌதி அரேபியாவின் மக்கா போன்ற பிரதேசங்களிலும் அங்கு நிகழும் தொழுகைகளையும் எப்படி அனுமதி பெற்று படம் பிடித்தார்கள் என்றே வியப்பாக இருக்கிறது.

இந்தியாவில் வாரணாசி போன்ற கங்கை கரையோர சடங்குகளையும் வழிபாடுகளையும் படம் பிடித்துள்ளனர்.ஆப்ரிக்கா,கென்யா,தான்சானியா,அர்ஜெண்டைனா,எகிப்து உட்பட மொத்தம் 24 நாடுகளில் உள்ள மிகப்பழமையான மடாலயங்களையும்,ஸ்தூபிகளையும்,சடங்கு வழிபாடுகளையும் பதிவு செய்திருக்கும் இப்படம் 14 மாத கடுமையான உழைப்பில் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டுள்ளது.பல்வேறு நிலவெளிகளையும், மனிதர்களையும், நாகரீகங்களையும்,துயரங்களையும் ஒருங்கே காணும் மனதில் வறட்டு நாத்திகத்தை புறந்தள்ளி எழுப்பும் அழுத்தமான கேள்வி இந்த வாழ்க்கை என்பதுதான் என்ன?

அவசியம் காண வேண்டிய ஒரு அரிய ஆவணப்படம்.




Saturday, February 6, 2010

நித்யகன்னி - எம்.வி.வெங்கட்ராமன்


தி.ஜா,கு.ப.ரா,ந.பிச்சமூர்த்தி,மௌனி,கரிச்சான் குஞ்சு என தொடங்கி தமிழின் சில முக்கிய இலக்கிய மாயாவிகளை உருவாக்கியதில் கும்பகோணத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.என் ஊரிலிருந்து வெறும் 25 கிலோ மீட்டர் தொலைவே கும்பகோணம்.அவ்வூரின் மீது ஒரு ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.இவர்களின் வரிசையில் எம்.வி.வி என அழைக்கப்படும் எம்.வி.வெங்கட்ராமனும் இருக்கிறார் என நித்யகன்னி நாவலை திறக்கும் போது தான் தெரிந்தது.அவரை ஏதோ கன்னட எழுத்தாளர் என்று குழப்பி கொண்டிருந்திருக்கிறேன்.
வியாச முனியின் மகாபாரத பெருஞ்சுரங்கத்திலிருந்து நித்யகன்னி என்ற சிறு பாத்திரத்தை எடுத்து கொண்டு கன்னிமை என்ற பரப்புக்குள் நீந்தி எழுந்திருக்கிறார் ஆசிரியர்.யாரையும் போல் எனக்கும் மகாபாரதம் மிகுதியும் செவி வழி கதை தான்.சென்னையில் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோடில் இருந்த நாட்களில் அங்கிருந்த திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து சில நாட்கள் பாரத வியாக்கியானம் நிகழ்ந்து கொண்டிருந்தது.கர்ண கொடூரமான ஒலி பெறுக்கி இம்சையையும் மீறி அந்த வியாக்கியானம் உள்ளே ஏறி கொண்டேயிருந்தது.இதுபோல் அவ்வப்போது கேட்க வாசிக்க நேரிடும் பாரத கதாபாத்திரங்களும்,பாத்திர சூழ்நிலைகளும்,அக கொந்தளிப்புகளும் பாரதத்தை முழுமையாக வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டிய வண்ணமேயிருக்கிறது.
இன்று வரை நவீன தத்துவங்கள் மற்றும் உளவியல் தீண்டியதும் தீண்டாததுமான பல்வேறு தளங்களை உணர்வு நிலைகளின் பல்வேறு அடுக்குகளை சிகரங்களை அநாயசமாக தீண்டியும் தாண்டியிருக்கும் இப்பெருங்கதையாடல் சமகாலம் வரை ஒரு சராசரி இந்தியனின் அன்றாட வாழ்வையும் போக்கையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பது சுலபமாக தவிர்த்து விடக்கூடிய ஒன்றல்ல.மேலும் பாரத வாசிப்பு வெறுமனே கதையின்பத்திற்கானது மட்டும் அல்ல.உலக தத்துவங்களும் விஞ்ஞானமும் காலமெல்லாம் தேடி வரும் மனித இருப்பின் அர்த்தங்களை ஆராயும் ஆய்வு நூல் என்றும் இந்திய நவீன மனதை கட்டமைத்திருக்கும் தொன்ம நினைவின் சத்தும் சாரங்களும் நிரம்பியது என்றும் கூறப்படுகிறது.

கன்னிமை என்றால் என்ன? ஏன் அதன் மீதான கதையாடல்கள் இவ்வளவு நிகழ்ந்திருக்கிறது.வெட்டுதல்,ஒட்டுதல்,கிழித்தல்,தைத்தல் என சரித்திர தையல்காரனின் எந்திரத்தில் நசுங்காத பெண்ணுடல்கள் எத்தனை? புனிதம் என்பது ஏன் பெண்குறியின் நுன் திரையால் நெய்யப்பட்டிருக்கிறது? உலகையே ரட்சிக்க பிறந்தவன் என்பவனை கூட அவனது தாய் ஒரு கன்னி என்ற கதையாடல் மூலம் மட்டுமே நிறுவ முடிகிறது.மேரி எப்படி ஒரு சராசரி பெண்ணை போல் ஆடவனோடு கூடி குலவியொரு ரட்சகனை ஈன்றெடுக்க முடியும்.ரட்சகனை ஈன்று தருபவள் புனிதமானவளாக,ஆளப்படாதவளாக,களங்கப்படாதவளாக,கன்னி மேரியாக மட்டுமே இருக்க முடியும்.புனித ஆவியால் புணரப்பட்டே ரட்சகன் அவதரிக்க முடியும்.அவனை மட்டுமே நம்மால் சிலுவையிலும் அறைய முடியும்.இங்மார் பெர்க்மன் இயக்கிய Virgin Spring கன்னிமையை மையங்கொண்டு கடவுள் விசாரணையாக விரியும் ஒரு அற்புதமான திரைப்படம்.
இதன் உளவியல் ஒரு பக்கம் இருக்கட்டும்.கன்னிமையை அதன் மீதான புனித கற்பிதங்களை புராணங்களும் இதிகாசங்களும் ஒவ்வொரு விதமாய் ஸ்திரமாய் நிறுவியிருக்கிறது.இதில் பாரத பெருங்கதையாடலின் போக்கை ஆசிரியர் அவதானித்துள்ளார்.அதன் ஓட்டத்தில் நிரடும் சிடுக்கிலொன்றை தெரிவு செய்கிறார்.அவள் நித்யகன்னி.நித்யகன்னி என்றும் பதினாறாய் சிவனால் ஆசிர்வதிக்கப்பட்ட மார்கண்டேயன் போல் என்றென்றும் கன்னியாக இருக்க தேவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டவள்.அவளொரு ஆடவனை கூடலாம்.கரு தரிக்கலாம்.ஒரு குழந்தை பிறந்த பிறகு மீண்டும் அவள் கன்னியாகவே மாறி விடுவாள்.அவள்
ஒரு போதும் தன் சிசுவுக்கு முலை ஈன முடியாது.ஒரு போதும் அவள் தாய்மையை அடைய முடியாது.அவள் நிரந்தர-நித்ய கன்னி.எனில் இது வரமா ? சாபமா ?

குறிப்பு: நாவலை வாசிக்காதவர்கள் வாசிக்க விரும்புபவர்கள் பின்வரும் மூன்று பத்திகளை தவிர்த்து நான்காம் பத்திக்கு தாவி விடவும்.

காலவ முனிவன் விசுவாமித்திரரின் மாணவன்.குருதட்சனையாக அவர் கேட்கும் ஒரு காது மட்டும் கறுப்பாக உள்ள 800 வெள்ளை குதிரைகளை யாசகம் பெற வேண்டி தர்ம ரூபி யயாதியிடம் செல்கிறான்.நித்யகன்னியான மாதவி அவன் நோக்கம் அறியாமலே அவன் மீது காதல் கொள்கிறாள்.குதிரைகளை யாசகம் தர முடியாத யயாதி காலவனிடம் தன் மகளை தர உறுதியளிக்கிறார்.இவளை கொண்டு உன் குதிரைகளை சம்பாதித்து கொள் எனக்கூறி விடுகிறார்.தான் தேடி வந்த நித்யகன்னி மாதவி என அறியாமலேயே காலவனும் மாதவி மீது காதல் கொண்டு விடுகிறான்.மூன்று மன்னர்களிடம் உள்ள 600 குதிரைகளை பெற வேண்டி அவளை அவர்களுக்கு மணம் செய்வித்து ஒரு குழந்தை பிறந்ததும் அவளை மீட்டு மணம் செய்து கொள்ளும் உத்தேசத்தோடு பயணம் செய்யும் காலவன் மற்றும் மாதவியின் உணர்வுகளை பகடையாக உருட்டியிருக்கிறார் ஆசிரியர்.
குதிரைகளை பெற வேண்டி அவள் மணம் செய்யும் மூன்று கணவர்களில் ஒருவன் சம்போக பிரியன்,மற்றொருவன் தத்துவ வியாக்கியானன்,மூன்றாமவன் மட்டுமே அவளை உள்ளும் புறமுமாக நேசிப்பவன்.உசீநரன் அழகின் உபாசகனாக இருக்கிறான்.நித்யகன்னியின் உடலே நித்ய சௌந்தர்யத்தில் இருக்கிறது.மனோ ரீதியில் அவள் சௌந்தர்யம் இழந்து கொண்டிருப்பவள் என்பதை அவன் மட்டுமே கண்டு கொள்கிறான்.தர்மம் பேனும் யயாதியை,காலவனை,விஸ்வாமித்திரரை என அறத்தின் தர்மத்தின் மனசாட்சியை உலுக்கும் நவீன மனமாக உசீநரன் உருக்கொள்கிறான்.பிறகு அவள் பொருட்டே அவன் கொலையும் செய்யப்படுகிறான்.

இதில் நித்யகன்னியான மாதவியின் நிலை என்ன? மனதில் ஒருவனை காதலனாக வரித்த பிறகும் மூன்று மன்னர்களை மணக்கும் அவள் மன நிலை என்ன? கன்னிமை மீண்டும் கிடைத்து விடும் என்றில்லாத நிலையில் அவளை பிற ஆடவனோடு மணம் செய்விக்கும் எண்ணம் காலவனுக்கோ,யயாதிக்கோ தோன்றுமா? அல்லது மன்னர்கள் தான் அவளை மணப்பார்களா? எனில் கன்னித்தன்மை என்பது வெறும் உடல் சம்மந்தப்பட்டதா? இதை ஒரு கட்டத்தில் மீத குதிரைகளுக்காக விஸ்வாமித்திரரே அவளை மணம் செது கொள்ளும் இடத்தில் ஆழமாக்குகிறார் ஆசிரியர்.மாதவி நீராடுகையில் ரிஷி குல பெண்கள் தெளிவாகவே அதை கூறி விடுகின்றனர்.மாதவிக்கு சித்த பிரமை ஏற்படும் நேரத்தில் வெளிப்படும் அவளது ஆழ் மன உரையாடல்கள் அல்லது உளறல்கள் மூலம் நம்மை உரசுகிறார் ஆசிரியர்.எது அறம்? எது தர்மம் ?

இந்நாவல் உருக்கொண்ட காலமும் சுணங்காத எழுத்தின் வீச்சும் கிளர்வை தந்தது.கன்னிமை குறித்த பிறிதொரு விசாரணையாக ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் இருக்கிறது.காதலித்த பெண் கண்ணெதிரே வேறு ஆடவர்களால் சூறையாடப் பட்ட பின்னர் அவ்வுடல் மீது தோன்றும் அசூயையை மையமாக கொண்டது அந்நாவல்.உடல் மீதான மனம் கொள்ளும் உரிமை அதன் மீதான அதிகாரம் விளைவான அரசியல் என்பதெல்லாம் சுலபமாக சிதைவு கொண்டு விடாது என்பதாலேயே நித்யகன்னி கிளாசிக்காக இருக்கிறது போலும்.இவருடைய பிரசித்தி பெற்ற மற்றொரு நாவல் காதுகள்.அதை தேடி வாசிக்கும் ஆவலை உருவாக்கியிருக்கிறது இந்நாவல்.
நாவல் முன் வைக்கும் கேள்விகள் நுட்பமானவை .நாட்பட்டு புரையோடிய முள்ளாய் இருந்து வலி தர வல்லவை.

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூ

Friday, January 22, 2010

The bridges of madison county...

"முன்பின் தெரியாத ஒருவனுடன் நம்மை பிணைத்துக் கொண்டு திடீரென்று அவனுடன் எப்படி வாழ்க்கையைத் தொடங்குவது? ரசிக உணர்ச்சி இல்லாதவனாகவோ ஹாஸ்ய உணர்ச்சி இல்லாதவனாகவோ,முன் கோபக்காரணாகவோ அல்லது அரைக் கிறுக்காகவோ அசடாகவோ - இப்படி யாராவது ஒருவனுக்கு தீர விசாரிக்காமல் வாழ்க்கைப்பட்டு விட்டால்,அப்புறம் என்ன செய்ய முடியும்? கழற்றவே முடியாத விலங்கு - மாற்றவே முடியாத ஆயுள் தண்டனை."

என்ன பயங்கரம்!

-
ஆதவனின் 'சிறகுகள் ' என்ற குறு நாவலிலிருந்து...



கிளிண்ட் ஈஸ்ட்வுட் நடித்த இயக்கிய சில திரைப்படங்கள் அற்புதமானவை.அவரது அலட்டலற்ற நடிப்பும் சன்னமான உணர்வுகளையும் பார்வையாளனிடம் கடத்திவிடும் இயக்க திறனும் வியக்க வைப்பவை.இணையம்,புத்தகம் என யாவும் வெறுப்பேற்றிய சில நாட்களுக்கு பிறகு மிதமான போதையுடனான இரவு துழாவலில் சிக்கியது இப்படம்.Million dollar baby க்கு பிறகு நெகிழ வைத்த மற்றொரு படம்.

ஒரு புதிய உறவு துளிர்க்கும் நொடியில் நம்மால் உணர முடிவதில்லை.இவ்வுறவு இறுதி வரை நீடிக்குமா அல்லது பாதியிலேயே இம்சிக்குமா என்றெல்லாம்.யாரோ வருவார்,யாரோ போவார் எனினும் இவர் நமக்கானவர் என ஒருவரை மனம் இனம் கானும் நிகழ்வு ஒரு அழகான புதிர்.சில சமயம் தோன்றும்.ஒவ்வொரு தனி மனிதனும் அன்பிற்காகவே ஏங்கிச் சாகிறான் என்று.என்னை புரிந்து கொள்,ஏற்று கொள்,மன்னித்து கொள் என்று கதறி மன்றாடுபவனது அகவலிகள் சொல்லி தீராததாகவே இருக்கிறது.
The Bridges of madison county...

நாற்பதுகளில் இருக்கும் ஃபிரான்செஸ்கா தனது 17 வயது மகன்,மகள் மற்றும் கணவனோடு அமெரிக்காவின் மேடிசன் பகுதியிலுள்ள லோவா என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறாள்.தன் கணவனின் விருப்பப்படி தனது ஆசிரியை தொழிலையும் விட்டு விட்டவள்,தன் குழந்தைகளின் வளர்ச்சியிலும்,சிறிய பண்ணையையும் கவனித்து கொள்வதில் பொழுதை செலவிடுகிறாள்.ஏதோ ஒரு காரணம் பொருட்டு தன் குழந்தைகள் மற்றும் கணவன் நான்கு நாட்கள் பயணமாக வெளியூர் செல்லும் நாளொன்றின் தனிமை பொழுதில்,அவ்வூரில் உள்ள பெயர் பெற்ற பாலங்களை புகைப்படம் எடுக்க வருகிறார் ஐம்பதுகளில் உள்ள ராபர்ட்.

பாலத்திற்கு செல்ல வழி கேட்கும் ராபர்ட்டோடு பாலம் வரை அவனோடு காரில் பயணிக்கும் ஃபிரான்செஸ்கோ அவனது முதிர்ந்த உரையாடல்களால் ஈர்க்கப்படுகிறாள்.திரும்பும் வழியில் தேனீர் அருந்த அழைக்கும் அவளது நட்பு ராபர்ட்டையும் ஈர்க்கிறது.திருமண பந்தத்தில் சிக்கி கொள்ளாமல் புகைப்படக் கருவியோடு மனம் போன போக்கில் நாடு நாடாக அலையும் அவனது ஆளுமை அவளை அவன் மீது இனம் புரியாத ஈர்ப்பு கொள்ள செய்கிறது.குடும்பம் என்ற பொறுப்புகளுள் சிக்குண்ட பின் நிறமிழந்து போன தன் கனவுகளை,எதிர்பார்புகளை பகிர்ந்து கொள்ளப்படாத அகத்தனிமையை யதார்த்தமாக அவனிடம் கூறுகிறாள்.

ஒரு கட்டத்தில் எதிர்பாராமல் அவளை சற்றே உரசி விடும் உரையாடலின் த்வனியை தவிர்க்கும் பொருட்டு அவன் அவளுக்கு நன்றி கூறி வெளியேறுகிறான்.குற்ற உணர்வு கொள்ளும் அவள் மீண்டும் அவனை சந்திக்க விரும்புகிறாள்.உடற் கிளர்ச்சி என்ற சிறு புள்ளிக்குள் முடங்காத தவிப்பொன்று இருவருக்கும் இடையே தோன்றுகிறது.மெல்ல தன் வசமிழக்கும் இருவருக்குமிடையேயான மனக்கொந்தளிப்புகள் நம்மையும் உருக்க தொடங்குகிறது.இன்னும் இரண்டு நாட்களில் ராபர்ட் சென்று விடுவான் என்ற ஏக்கமும்,காதலற்ற ஒரு சராசரி குடும்ப தலைவி வேடத்திற்குள் மீண்டும் புதைய போகும் வருத்தங்களும் அவளை அலை கழிக்கிறது.போலவே ராபர்ட்டும் உணர்கிறான்.

அவளது கணவனிடம் தான் பேசுவதாகவும்,தன்னோடு வந்து விடும் படியும் கூறும் அவனது அழைப்பை மறுக்கிறாள்.பொறுப்புள்ள ஒரு தாயாக,மனைவியாக,சொந்த விருப்பு வெறுப்புள்ள ஒரு பெண்ணாக அவளுள் நிகழும் மனப்போராட்டங்கள் உறைய வைக்கின்றன.

Meryl Streep
தன் அபாரமான நடிப்பின் மூலம் கலங்கடித்திருக்கிறார்.நீ போய்விடுவாய்,காலமெல்லாம் காதலை சுமந்தபடி நான் இங்கே சாக வேண்டும் என கொந்தளிக்கும் போதும்,அவன் சென்ற பின் ஊரிலிருந்து திரும்ப வரும் தன் கணவனையும் குழந்தைகளையும் வரவேற்று சுவருக்கு பின்னே சென்று குமுறும் பொழுதும்,மீண்டும் சாலையில் பார்க்க நேரும் ராபர்ட்டை கண்டு அருகில் அமர்ந்திருக்கும் கணவனிடம் கூற முடியாது,கார் கதவை திறந்து விட தவித்து மருகும் பொழுதும் நொறுக்கி விடுகிறார்.

மத்திய வயதில் ஏற்படும் காதலை இதன் அளவிற்கு அழுத்தமாக சொன்ன வேறு படங்களை நான் பார்த்திருக்கவில்லை.
ராபர்ட் ஜேம்ஸ் வாலர் எழுதிய இந்நாவலையும் அவசியம் வாசித்து விட வேண்டும்

கற்பு,ஒழுக்கம் என்ற சமூக தீர்ப்புகள் தனி மனித விருப்புகளை கிஞ்சித்தும் சட்டை செய்வதில்லை.திருமணங்கள் அற்புதமானதாய் இருக்கக்கூடும்.ஆழமான ஒரு புரிந்துணர்வில்.இப்பொழுது என் கழுத்திற்கு மேலேயும் ஒரு நுகத்தடி தொங்க காத்திருக்கும் பீதி.வாழ்க்கை வெறும் வட்டி தொழில் தானோ...நான் பிறந்த காரணத்தை நானே அறியும் முன்னே என்று பாடத்தொடங்கினால் வேற என்ன பொரட்சி செய்றதா உத்தேசம் தொரைக்கு என்று மிரட்டுகிறது தந்தை குலம்.ம்..இருக்கட்டும்.

பார்க்க வேண்டிய படம்.


Wednesday, December 23, 2009

ஒரு மழை மேகம்...

கண்ணாடி பதித்த
உன் ஸ்டிக்கர் பொட்டு தேர்வுகளோ
நாட்களுள் சுழலும் உன் அவஸ்தை குறித்தோ
யாதொரு கவனமும் இல்லை எனக்கு...

வாயிலா காட்டனா
மோஸ்தர் என்ன இப்பொழுது
சுங்கிடி? சுரிதார்?
என்ன பிடிக்கும் உனக்கு
ஒன்றும் புரிவதில்லை...

என் தேவைகள்
சொற்பம்...

நான் போதும் எனக்கு

எனினும்

நிக்கோடின் படிந்த
உதடுகளை
முத்தமிட மறுத்து

நீ
தொடை குறுக்கும்
இரவுகளில்

என் மழை மேகம்
ஊர் கடக்கிறது...

ஒரு புல் நுனி
கிரீடம் களைகிறது...

Wednesday, December 2, 2009

அவர்கள் பேசட்டும்...

உன்
நானும்
என்
நீயும்
பேசும் அறையில்
ஏன்
நாம்
இடைஞ்சலாய்
வா
கொஞ்சம்
வெளியில்
இருப்போம்...